தாக்குதல்: தமிழக அரசே பொறுப்பு-நெடுமாறன்
சென்னை: உயர்நீதிமன்ற வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காட்டுமிராண்டித்தனம்-வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,
150 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை ஐகோர்ட்டில் நூற்றுக்கணக்கான காவல் துறையினரும் அதிரடிப்படையினரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, காட்டுமிராண்டித்தனமாக வக்கீல்களையும் வாகனங்களையும் தாக்கி உள்ளார்கள். வேதனை என்னவென்றால் ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகப் பெருமாளும் காவல் துறையினரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியே இதுகுறித்து விசாரிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தை சார்டட் நீதிமன்றம் என்று அழைப்பார்கள்.
இங்கு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர், மத்திய, மாநில அமைச்சர்கள், இந்திய அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்று அரசியல் சாசனத்தை வடித்த டாக்டர் அம்பேத்காருக்கு துணை நின்றவர்கள். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகள் போன்ற ஆளுமைகள் உலாவிய இந்த நீதிமன்றத்தில் போலீசாரின் நடவடிக்கையால் ரத்தம் சிந்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழக வரலாற்றிலேயே நடைபெறாத வகையில் காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பொறுப்பேற்று தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு யார் பாதுகாப்பு? விஜயகாந்த்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை ஐகோர்ட்டில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வன்முறை வெடித்துள்ளது. வக்கீல்கள் பலர் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மண்டை உடைந்துள்ளது. அங்கிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் சிலரும் படுகாயமடைந்துள்ளனர்.
கல் எறிவதும், தடியடி பிரயோகமும் தாராளமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. வக்கீல்களும், போலீசாரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது, ஐகோர்ட்டு ஓர் யுத்த களம் போல் காட்சியளித்தது. ஐகோர்ட்டு வளாகத்தில் ஒரு போலீஸ் நிலையமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
வன்முறை, கலவரங்கள் மற்றும் குற்றங்கள் போன்றவை நாட்டில் நடந்தால், அவற்றிற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பளிப்பது ஐகோர்ட்டு. ஆனால் இப்பொழுது ஐகோர்ட்டே கலவர பூமியாக ஆகிவிட்டதை யார் தீர்த்து வைப்பது? பொது மக்களுக்கு யார் பாதுகாப்பு?
ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த பயங்கர மோதல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள நாகரிக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். இந்த சம்பவம் பற்றி முழு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரை மத்திய அரசு நியமித்து விசாரணைக்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசே பொறுப்பு-நெடுமாறன்:
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு மத்தியக் காவல் படையினர் உள்புகுந்து அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள்.
உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் மத்தியக் காவல் படையை வரவழைத்து வழக்கறிஞர்களைத் தாக்கியதற்கான முழுப் பொறுப்பையும், தமிழகத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர்தான் ஏற்க வேண்டும். இவர்கள் அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். வழக்கறிஞர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் இடைவிடாமல் போராடி வரும் வழக்கறிஞர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தையே ஒடுக்கிவிட முடியும் என முதல்வர் கருதுவாரானால் அது தவறு என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி, வேதனை - சரத்குமார்:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவல்துறையும் நீதித்துறையும் சட்டத்தின் பாதுகாவலர்கள். ஆனால் அதே காவல்துறையும், நீதித்துறையின் அங்கமான வக்கீல்களும் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி மீது நடந்த முட்டை வீச்சு சம்பவத்திற்கு பிறகு அரசு உயர் அதிகாரிகளை கொண்டு மிகுந்த கவனத்துடன் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய மோசமான சம்பவம் நடைபெற்றிருக்காது என்பது உறுதி என்றார்.












Click it and Unblock the Notifications