லோக்சபா கூட்டத் தொடரின் கடைசி நாளில் பிரதமர் பங்கேற்கிறார்
டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதியுடன் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைகிறது. அந்த நாள்தான் நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி நாளும் ஆகும்.
தற்போதைய கூட்டத் தொடரில் பிரமதர் பங்கேற்கவில்லை. இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருவதால் அவரால் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளில் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளார். அன்றைய தினம் சுருக்கமாக அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.
தனது அரசுக்கும், தனக்கும் ஆதரவு அளித்ததற்காக மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து பிரதமர் பேசுவார்.
மேலும் திங்கள்கிழமை முதல் 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து பணிகளைத் தொடங்கவுள்ளார் பிரதமர்.
இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பிரதமரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
சோனியாவைத் தொடர்ந்து அவரது அரசியல் செயலாளர் அகமது படேலும் பிரதமரை சந்தித்துப் பேசினார். லோக்சபா தேர்தல் குறித்து அப்போது பிரதமருடன், படேல் ஆலோசனை நடத்தினார்.
தற்போது பிரதமர் மன்மோகன் சிங் 3 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்தபடி தனது பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.