ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுக சார்பில் பிரமாண்ட மனித சங்கிலி
சென்னை: ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், திமுக இளைஞர் அணி சார்பில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் சென்னையில் நேற்று நடந்தது.சென்னை ராயபுரம் சூரிய நாராயணன் தெருவில் தொடங்கி கிண்டி வரை இந்த மனிதச் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது.
உள்ளாட்சித் துறை அமைச்சரும், இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தயதாநிதி மாறன், ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, நடிகர்கள் நெப்போலியன், தியாகு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
அண்ணாசாலை, மன்றோ சிலை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், கிண்டி உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று அமைச்சர் ஸ்டாலின் மனித சங்கிலியைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் நாள்தோறும் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்களை காப்பற்ற வேண்டும். அதற்காக இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் இளைஞர் சங்கிலி மாநிலம் எங்கும் நடைபெறுகின்றது.
இதில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி மட்டுமல்லாமல் தமிழின உணர்வு படைத்த பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை ஏற்று இரு தரப்பினரும் ஆயுதங்களைக் கீழே போட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.