கருணாநிதியுடன் மதிமுக கண்ணப்பன் திடீர் சந்திப்பு

இதையடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 11ம் தேதி முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கருணாநிதி மருத்துவமனையிலேயே தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார்.
அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர். ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முதல்வரை சந்தித்து நலம் விசாரிக்கும் சாதாரண பண்பு கூட இல்லை என்று இரு தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.
வழக்கமாக தனக்கு எதிரான கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை தரும் பண்புடையவர் வைகோ. உடல் நலம் குன்றினால் அது எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் போய் சந்தப்பார்.
ஆனால், இப்போது மதிமுக மிக இக்கட்டடான நிலையில் உள்ளது. கருணாநிதியை சந்தித்தால் தனது கூட்டணித் தலைவியான ஜெயலலிதா கோபி்த்துக் கொள்வார் என்பதால் தான் அவரை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதை வைகோ தவிர்த்து வந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், காங்கிரசுடன் கூட்டணிக்குத் தயார் என்று திடீர் பல்டி அடித்துள்ள ஜெயலலிதாவின் செயல் வைகோவை அதிர வைத்துவிட்டதாகத் தெரிகிறது. இலங்கைத் தமிழர் விஷயத்தில் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் வைகோ.
இதனால் காங்கிரசுடன் கைகோர்த்துக் கொள்ள ஜெயலலிதா தயார் என்றால் தன்னை எந்த நேரத்திலும் கூட்டணியிலிருந்து வெட்டி விடவும் ஜெயலலிதா தயார் தான் என்பதால் வைகோ அதிர்ந்து போயுள்ளார்.
இதனால் தானும் கூட்டணி மாறுவது உள்பட எதற்கும் தயார் தான் என்பதை அதிமுகவுக்கு சுட்டிக் காட்டும் வகையில் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பனை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.
இச் சந்திப்பு குறித்து கண்ணப்பன் கூறுகையில்,
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் 50 ஆண்டுகள் அவருடன் பழகியவன் என்ற முறையிலும் முதல்வரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். இந்ச சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்வர் விளக்கினார் என்றார்.
ஆனாலும் இருவருமே அரசியல் ஆலோசனைகளிலும் ஈடுபட்டதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications