சீமான் தனி மனிதன் அல்ல-பாரதிராஜா
புதுச்சேரி: இலங்கை பிரச்சனை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதைவிடவா சீமான் பேசி விட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானை இயக்குனர்கள் பாரதிராஜா, மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
பின்னர் நிருபர்களிடம் பாரதிராஜா பேசுகையில்,
தமிழன் அழிவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. சீமான் உள்ளே இருப்பது தான் நல்லது. நாங்கள் அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்க ஆசைப்படவில்லை. தமிழ் இனம் அழிகிறதே என்பதற்காக தான் போராட்டம் நடத்துகிறோம்.
மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. ஆனால் இலங்கையில் தமிழ் இனம் அழியும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பியது. இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். அதைவிடவா சீமான் பேசி விட்டார். இனப் படுகொலையை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. சீமான் தனி மனிதன் அல்ல. அவருக்கு பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது.
இலங்கையில் பல லட்சம் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு கேட்டு போராடுவது தவறா?. அப்படி போராடினால் இறையாண்மைக்கு எதிரா?. தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் பாதுகாக்க எந்தப் போராட்டமும் நடத்துவோம் என்றார்.