ஒரு நாள் முன்னதாகவே முடிந்தது சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாக இன்றே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதல்வர் கருணாநிதிக்கு அளி்க்கப்பட்டு வரும் பாதுகாப்பை விட கூடுதலான பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படுகிறது.
தற்போது வந்துள்ள வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அளித்து வரும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், 17ம் தேதி கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அரசு அலுவல்கள் இருந்தால் இந்த கூட்டத் தொடரை 27ம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அரசு அலுவல்கள் எதுவும் இல்லாததால் கூட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்வது என்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று சட்டசபை கூட்டம் முடிவடையும் என்று அறிவித்தார்.
இதையடுத்து சில சட்ட முன் வடிவுகள் மற்றும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னதாக நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அன்பழகன்,
கடந்த 3 மாத காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த முதலமைச்சர் கருணாநிதி ஒரு மாதத்திற்கு முன்பு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்று இப்போது குணமடைந்து வருகிறார்.
எனினும் அவர் தொடர்ந்து 3 வார காலத்திற்கு படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலையில் உள்ளார். ஆனாலும் சட்டமன்றத்தின்பால் அவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக தான் ஒரு நாளாவது இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார் என்றார்.
ஆனால், மருத்துவர்கள் அறிவுரையாலும் கூட்டத் தொடர் முன்பே முடிவதாலும் அவர் பங்கேற்க முடியவில்லை.
அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு:
முன்னதாக சட்டசபையில் அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மசோதாவை முன்மொழிந்தார்.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, தற்போது பட்டியலிடப்பட்ட ஜாதியினருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில்,3 சதவீதம் அருந்ததியினருக்கு ஒதுக்கப்படும்.












Click it and Unblock the Notifications