திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்.
நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.
புதுச்சேரியின் ஒரு தொகுதியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக-16 (இதில் ஒன்றில் திமுக சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடது), காங்கிரஸ்-10, பாமக-6 (இதில் ஒன்று புதுச்சேரி தொகுதி), மதிமுக-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட்-2 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்த அனைத்து இடங்களிலும் இந்தக் கூட்டணி வென்று மாபெரும் சாதனை படைத்தது. அந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக (33 இடங்களில் நின்றது), பாஜகவுக்கு (7 இடங்களில் போட்டியிட்டது) ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
ஆகிய இடங்களில் போட்டி யிட்டன.
ஆனால், இப்போது திமுக கூட்டணி கலகலத்துப் போயுள்ளது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டன. இப்போது இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன.
இவர்களுக்கு முன்பே மதிமுக விலகி அதிமுக கூட்டணிக்குப் போய்விட்டது.
பாமகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க விரும்பினாலும் திமுகவுடன் மோதல் போக்கில் உள்ளது. திமுகவுடன் உறவை சீர் செய்தால் மட்டுமே கூட்டணியில் நீடிக்க முடியும் என அக் கட்சியின் தலைவர் ராமதாசிடம் கடந்த வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனால் பாமக திமுக கூட்டணியில் சேருமா அல்லது வழக்கம்போல் பல்டி அடித்து அதிமுக பக்கம் போகுமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் விலகி விட்டதால் திமுக கூட்டணியில் திமுக கூட்டணியி்ல் 8 இடங்கள் கூடுதலாக உள்ளன. பாமகவும் விலகிவிட்டால் திமுக, காங்கிரசுரக்கு மேலும் 6 இடங்கள் கூடுதலாக இருக்கும்.
இப்படியாக மொத்தம் 8 அல்லது 14 இடங்கள் வரை கிடைப்பதால் திமுக அதிக இடங்களில் போட்டியிட முயல்கிறது. அதே போல காங்கிரசும் கூடுதல் இடங்களைக் கேட்க முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே எஞ்சியிருந்தால் இருவருமே சரி சமமாக இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறுவதாகத் தெரிகிறது.
அதாவது புதுச்சேரியையும் சேர்த்து திமுக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் நிற்கலாம் என்கிறது.
பாமக கூட்டணிக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு 6 இடங்களைத் தந்துவிட்டு நாம் தலா 17 இடங்களில் போட்டியிடலாம் என்பது காங்கிரஸ் சொல்லும் கணக்கு.
ஆனால், கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால் 10 இடங்கள் வரை கேட்டு கடைசியில் 8 இடங்களுக்கு ஒப்புக் கொள்வார் ராமதாஸ் என்று திமுக கருதுகிறது.
அப்படி நடந்தால், மிச்சமிருக்கும் 32 தொகுதிகளில் தான் 20 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு 12 இடங்களையும் (கடந்த தேர்தலை விட 2 இடம் ஜாஸ்தி) தர திமுக நினைப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கூட்டணிக்குள் யார் வந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இடங்களை சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் நச்சரிப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைகள் தான் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்- திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு வலைவீசுவதை காங்கிரஸ் இன்னும் நிறுத்தவில்லை. அவர் கூட்டணிக்குள் வந்தால் பாமகவை வெட்டிவிடுவது என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது.
அப்படி ஒரு நிலை வந்தால் தேமுதிகவுக்கும் சேர்த்து திமுகவிடம் காங்கிரஸ் இடங்களைக் கேட்கும். அதாவது தேமுதிக-காங்கிரஸ் இடையே தான் கூட்டணியாம். திமுகவுடன் தேமுதிகவுக்கு நேரடியாக கூட்டணி இல்லையாம்.
இதைச் சொல்லித்தான் விஜய்காந்துக்கு காங்கிரஸ் வலை வீசிக் கொண்டுள்ளது. அவர் ஒப்புக் கொண்டுவிட்டால் திமுகவிடம் 25 இடங்கள் வரை காங்கிரஸ் கேட்கும் என்று தெரிகிறது. அதி்ல் 5 முதல் 8 இடங்களை விஜய்காந்துக்கு ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது.