மார்ச் 3ம் தேதிக்குள் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வக்கீல்கள் கெடு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் வக்கீல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஜிபி, போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் மீது மார்ச் 3ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி, ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிஷன் தனது விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது.
நேற்று வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் மாலதி உள்ளிட்டோர் ஸ்ரீகிருஷ்ணாவை சந்தித்து மனு அளித்தனர், தத்தமது தரப்பு நியாயத்தை விளக்கினர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அங்கு சேதமடைந்த வாகனங்களையும், கட்டட பகுதிகளையும் பர்னிச்சர்களையும் பார்வையிட்டார். எரிக்கப்பட்ட காவல் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.
இன்றும் தனது விசாரணையை தொடர்ந்து நடத்தினார் ஸ்ரீகிருஷ்ணா. இன்று காலை மூத்த வக்கீல்களை நீதிபதி சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
இன்றைய விசாரணையின்போது, மூத்த வக்கீல்கள் தங்களது கோரிக்கைகளை மீண்டும் நீதிபதியிடம் வலியுறுத்தினர்.
குறிப்பாக டிஜிபி, கமிஷனர் ஆகியோர் மீது உடனடியாக நவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் 3ம் தேதிக்குள் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இன்றைய விசாரணையை முடித்துக் கொண்டு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் உச்சநீதிமன்ற பெஞ்சி்டம் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் 3ம் தேதி உச்சநீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்கும். இதைப் பொறுத்து வக்கீல்களின் போராட்டம் விலக்கப்படுமா, காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவார்களா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications