வக்கீல்-போலீஸ் மோதல் ஒரு நாடகம்: நெடுமாறன்
கோவை: இலங்கை தமிழர் பிரச்சனையை வக்கீல்கள், போலீசார் மோதலை நடத்தி திசைதிருப்பி கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
திருப்பூர் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 'நாதியற்றவனா ஈழத்தமிழன்?' என்ற தலைப்பில் திருப்பூர் யுனிவர்சல் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். இதில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில்,
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தேர்தல் இயக்கம் அல்ல, இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுவாக்கப்பட்ட இயக்கம். இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் எழுந்துள்ளது. ஆனால் நமது குரல் டெல்லி காதில் விழ மறுக்கிறது.
இலங்கையில் இலங்கை ராணுவம் நமது தமிழ் மக்களை கொன்று குவிக்கிறார்கள். தமிழர்கள் வாழ இடம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாவிட்டால் சென்னையில் இருப்பவர்களுக்குத் தெரிய வேண்டும்.
ஈழ தமிழர்களுக்காக இங்கு யார் போராட்டம் நடத்தினாலும் எனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று கலைஞர் புலம்புகிறார். நாங்கள் உங்கள் ஆட்சியை கவிழ்க்க போராடவில்லை, ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் போராடவில்லை என்பதால் தான் இந்த இயக்கத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.
ஈழத் தமிழர்களுக்கான எங்களுடன் நீங்கள் சேர்ந்து போராடினால் இன்னும் 100 ஆண்டு காலம் நீங்களும், உங்கள் கட்சியினரும் ஆட்சியில் நீடிக்க முடியும். உங்கள் மீது ஒரு துரும்பு கூட விழாமல் நாங்கள் பாதுகாப்போம்.
இலங்கை தமிழர் பிரச்சனையை வக்கீல்கள், போலீசார் மோதலை நடத்தி திசைதிருப்பி கொச்சைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் நீதிமன்ற வரலாற்றில் அழியாத ஒரு சம்பவமாக இருக்கும்.
ஒருநாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் தங்கபாலு கூறுகிறார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இனவெறி தாக்குதல் நடந்தபோது, இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு தென்னாப்பிரிக்காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்திரா காந்தி ஆட்சியின் போது வங்கதேச பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவில்லையா?
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது மனிதாபிமான பிரச்சினையாகத்தான் உலக நாடுகள் பார்க்க வேண்டும். இந்திய துறைமுகங்கள், விமானத் தளங்கள் மூலம் பல்வேறு நாட்டில் இருந்து ஆயுத உதவிகள் இலங்கைக்கு செல்வதை தடுத்து நிறுத்தினாலே இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்.
நாடாளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஒரு காங்கிரஸ் எம்.பி கூட வெற்றி பெற்று சென்று விடக்கூடாது. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினருக்கும் இதை அறிய செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications