பொது சின்னம் இல்லை-குழப்பத்தில் சிரஞ்சீவி
ஹைதராபாத்: தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டதையடுத்து அக் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி குழப்பத்தில் உள்ளார்.
சிரஞ்சீவி துவக்கி பிரஜா ராஜ்யம் முதன் முறையாக நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
இதையடுத்து தனது கட்சிக்கு பொது சின்னம் வேண்டும் என்றும், அதை ரயில் சின்னமாக தரும்படியும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார்.
பொது சின்னம் கிடையாது...
ஆனால், இந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே, அவர்கள் கோரும் சின்னங்களை ஒதுக்க முடியும். தேர்தல் கமிஷனில் பதிவு மட்டும் செய்திருக்கும் கட்சிகள், ஆணையத்தின் பட்டியலில் உள்ள சின்னங்களில் ஒன்றை தான் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தலில் ஒரு கட்சி போட்டியிட்டு, குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை பெற்றால் மட்டுமே, அந்த கட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில் பொது சின்னம் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்றார்.
குழப்பத்தில் சிரஞ்சீவி...
பொது சின்னம் கிடைக்காததை அடுத்து தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் சிரஞ்சீவி கட்சியினர் மத்தியில் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நிலை.
இதையடுத்து ஏதாவது ஒரு தேசிய கட்சியின் தேர்தல் சின்னத்தை பகிர்ந்து கொள்வது உள்பட சில வழிமுறைகளை பிரஜா ராஜ்யம் கட்சி ஆராய்ந்து வருகிறது.
மற்ற கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் தங்களுடைய அடையாளத்தை, தனித்துவத்தை இழந்துவிடுவோம் என்ற பயமும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு...
இந் நிலையில் சிரஞ்சீவி சார்பில் அவரது மைத்துனர் அல்லு அரவிந்த் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் ரயில் சின்னத்தை எங்களுக்கு பொது சின்னமாக ஒதுக்கும்படி கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். ஆந்திராவில் எங்கள் கட்சிக்கு 20 சதவீத ஓட்டுகள் உள்ளன. பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் 55 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
எனவே எங்கள் கட்சிக்கு பொது சின்னமாக ரயில் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.