நாடாளுமன்ற தேர்தல்: பாதுகாப்புக்கு 18 ஆயிரம் சிஐஎஸ்எப் வீரர்கள் தயார்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு 150 கம்பெனிகளைச் சேர்ந்த 18 ஆயிரம் சிஐஎஸ்எப் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என சிஐஎஸ்எப் இயக்குனர் ஜெனரல் என்ஆர் தாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் என்ஆர் தாஸ் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக 150 கம்பெனி வீரர்களை உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. இதையடுத்து எங்களிடம் இருக்கும் 8 பட்டாலியன்களில் 6 பட்டாலியன்களில் உள்ள வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்பவுள்ளோம். மீதமுள்ள இரண்டு பட்டாலியன்களும் இயற்கை சீற்றங்கள் போன்ற திடீர் பிரச்சினைகளுக்காக தயார் நிலையில் வைக்கவுள்ளோம்.
தேர்தல் பணியில் அமர்த்தப்படும் வீரர்கள் தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவின் பேரில் செயல்படுவர். தேர்தல் பூத்களை கவனிப்பது மற்றும் தேர்தல் பாதுகாப்பை மட்டுமே அவர்கள் கவனிப்பார்கள். நக்சல் பிரச்சினை உள்ளிட்டவற்றை மாநில போலீசார் தான் பார்க்க வேண்டும்.
ஐபிஎல் தொடருக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து யாரும் எங்களிடம் கேட்கவில்லை. அதனால் அது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.
கடந்த மாதம் இன்டிகோ நிறுவன விமானம் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின் அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையில் பொதுவான நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவருக்கும் இடையில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் என்ஆர் தாஸ்.












Click it and Unblock the Notifications