சீமானைப் பார்க்க சிறைக்கு வந்த இயக்குநர்கள் செல்வமணி, சுந்தரராஜன் கைது
கடலூர்: கடலூர் சிறைக்கு இயக்குநர் சீமானைப் பார்க்க வந்த இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன் மற்றும் ஆர்.கே.செல்வமணியை, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கியதாக கூறி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை பிரச்சினைக்காக புதுச்சேரியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புதுச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நெல்லை போலீஸாரிடம் சீமான் சரணடைந்தார். பின்னர் அவர் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை புதுச்சேரி சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி புதுச்சேரி மத்திய சிறையில் சீமான் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே நெல்லை போலீசார் தொடர்ந்த வழக்கில் கைதான சீமானின் காவல் நேற்றுடன் முடிந்தது. அவரது காவலை நீடிக்க நெல்லை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து செல்ல வேண்டும். நெல்லைக்கு செல்ல அதிக தூரம் இருப்பதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து டைரக்டர் சீமான் நேற்று காலை புதுச்சேரி ஜெயிலில் இருந்து கடலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
அவர் பகல் 12.15 மணிக்கு கடலூர் சிறைக்கு வந்தார். இதை அறிந்து ஏராளமான பாமகவினர் அங்கு திரண்டனர். சிறை வாசல் முன்பு பெரும் திரளான பாமகவினர் கூடியிருந்தனர். அதேபோல இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜனும், ஆர்.கே.செல்வமணியும் அங்கு தனித் தனியாக கார்களில் வந்தனர். சீமானைப் பார்ப்பதற்காக அவர்கள் வந்திருந்தனர்.
சீமான் சிறைக்கு கொண்டு வரப்பட்டபோது அங்கு கூடியிருந்த பாமகவினர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், சீமானுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
50க்கும் மேற்பட்ட பாமகவினரை அங்கிருந்து அகற்று கல்யாண மண்டபம் ஒன்றுக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சமயத்தில் பாமகவினரோடு சேர்ந்து நின்று கொண்டிருந்த செல்வமணி, சுந்தரராஜனையும் போலீஸார் கைது செய்வதாக கூறினர். இதைக் கேட்டு குழப்பமடைந்த அவர்கள், எங்களை ஏன் கைது செய்கிறீர்கள், நாங்கள் சீமானைப் பார்க்கத்தான் வந்தோம். போராட்டம் செய்யவில்லை என்றனர்.
அதற்குப் போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் முன்பு நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். உங்களது தலைமையில்தான் ஆர்ப்பாட்டமே நடந்தது என்று கூறி கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களையும், அவர்களுடன் வந்திருந்த 3 பேரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில்தான் அவர்களும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாமகவினரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
சிறைக்குள் விசாரணைக்காக சென்று விட்டு திரும்பிய சீமானிடம், சுந்தரராஜன், செல்வமணி ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் தெரிவித்தபோது அவர் அதிர்ச்சியும், வருத்தமும் வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என்னை பார்க்க வந்த இயக்குநர்களைக் கைது செய்தது தேவையற்றது. நெல்லையில் என்மீது போடப்பட்ட வழக்குக்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் எனது காவலை வருகிற 20-ந் தேதி வரை நீடித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார் என்றார். பின்னர் மீண்டும் அவர் புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டார்.