தமிழர்களுக்கு உதவ 25 டன் மருந்துகள்-மருத்துவ குழு இலங்கை பயணம்

போர் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவர்கள் மீதும் ராணுவத்தினர் தாக்குதல்களை தொடர்ந்து வருவதால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.
பட்டினியாலும், தொற்று நோய்களாலும், காயங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தமிழர்களுக்கு இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
இதையடுத்து இந்த மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவ அனுமதிக்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா கோரியது. இந்த அனுமதி கிடைத்ததையடுத்து ரூ.7 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் மற்றும் சிறப்பு மருத்துவ குழுவினரை நேற்று மாலை இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தில் மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இந்தக் குழுவில் மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை நிபுணர்களும் இடம் பெற்றுள்ளனர். 25 டன் மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இன்று இரண்டாம் கட்டமாக டெல்லியில் இருந்து புறப்படும் குழுவில் செவிலியர்கள், பரிசோதனைக்கூட ஊழியர்கள் செல்கின்றனர். அவர்களுடன் 25 டன் மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மக்களுக்கு உதவ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், தேர்தலும் வரவுள்ள நிலையில் இந்த மருத்துவப் பொருட்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications