மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ
செங்கோட்டை: புளியரை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியது.
புளியரை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி காட்டுத்தீ பரவி வருகிறது. நேற்று புளியரை கற்குடியில் உள்ள காட்டுபகுதிகளில் தீ வேகமாக பரவியது.
நேரம் செல்ல செல்ல தீ உக்ரம் அதிகரித்து பல கிமீ சுற்றளவில் இருந்த அரிய வகை காட்டு மரங்கள், மற்றும் பல வகையான மூலிகை செடிகளை எரித்து சாம்பலாக்கியது.
இப்பகுதியில் கட்டு பன்றி, மிளா, மான்கள், கரடி, காட்டு எருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் காட்டு தீயில் இருந்து தப்பியோடின. வேகமாக தப்பி செல்ல முடியாத சில மலை பாம்புகள் தீயில் கருகின.
காட்டு தீயை அணைக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இரவு நேரத்தில் மலை பகுதியில் கொளுந்து விட்டு எரிந்த தீ பல கி்மீ தூரத்திற்கு தெரிந்தது.
குன்னூரிலும் தீ:
அதே போல நீலகிரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்லாக், டால்பின் நோஸ், கீழ்சிங்காரா, கீழ்அடார்லி, குரும்பாடி, சேம்புகரை ஆகிய பகுதிகளில் கடுமையான வறட்சியால் காட்டு தீ பரவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்த அபூர்வ ரக மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து வருகின்றன.
இந்த வன பகுதியில் இன்றும் 3-வது நாளாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1000 ஏக்கர் பரப்பளவுக்கு காட்டு தீ பரவியிருப்பதால் வன விலங்குகளும் தீயில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தீ காரணமாக குன்னூர் நகர் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications