இன்று புனித மிலாது நபி-தலைவர்கள் வாழ்த்து
சென்னை: புனித மிலாது நபி தினத்தையொட்டி தமிழக தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில்,
அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். உன்னை போல் பிறரையும் நேசி என அறிவுரை வழங்கியதுடன் அதன்படி வாழ்ந்து காட்டிய இறைத் தூதர் முகமது நபியின் பிறந்தநாளில் அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் என்னுடைய மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின்படியும், அவரது அறிவுரைகளின்படியும் வாழ்ந்திடவும் அதன் மூலம் சமுதாயத்தில் அமைதியும், சமாதானமும் திகழ இந்நன்நாளில் அனைத்து மக்களும் சூளுரை எடுத்து கொள்வோம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
மதிமுக பொது செயலாளர் வைகோ வாழ்த்து செய்தியில்,
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காயிதே மில்லத் ஆகியோர், அந்த நேச நல்லுறவை போற்றி வளர்த்தார்கள். அவர்கள் காட்டிய வழியில், தமிழகத்தில் சமய ஒற்றுமையை ஓங்கச் செய்ய, இஸ்லாமிய உலகம் கொண்டாடும் மிலாது திருநாளில் உறுதி ஏற்போம். இந்த நன்னாளில், இஸ்லாமிய பெருமக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியோடு, மதிமுக சார்பில் மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில்,
மனித நேயம், சகோதர உணர்வு, சமத்துவம், கருணை, கொடை உள்ளம் ஆகிய நற்பண்புகள் எல்லாருடைய உள்ளங்களிலும் மலர்ந்து இவ்வுலகம் அமைதியின் நிலைக்களனாய் விளங்கிட நபிகளாரின் சீரிய கொள்கைகளை கடைபிடித்திட உறுதி ஏற்போம். நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மிலாது நபி திருநாளில் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.