தென் சென்னை தொகுதி கோரும் நெப்போலியன்
சென்னை: தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு கோரி நடிகர் நெப்போலியன் நேரில் வந்து விருப்ப மனு அளித்தார்.
திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 15ம் தேதி விருப்ப மனுக்களை அளிக்கலாம். 25ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், திமுகவினர் பெரும் ஆர்வத்துடன் சீட் கேட்டு விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி கொடுத்து வருகின்றனர். இதுவரை 600 பேர் விருப்ப மனுக்கள் வாங்கியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மனு வினியோகம் செய்யப்பட்டது.
நடிகர் நெப்போலியன் தேர்தலில் போட்டியிட ஆர்வம் வெளியிட்டிருந்தார். கட்சி மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிடுவேன் எனறும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டிருந்தன.
ஆனால் நேற்று நெப்போலியனே நேரில் வந்து மனு வாங்கினார். தென் சென்னையில் போட்டியிட நெப்போலியன் மனு கொடுத்தார். அவருடன் தொழில் அதிபர்கள் எஸ்.வி.எம்.சரவணன், பெரியசாமி, நெப்போலியன் ரசிகர் மன்ற தலைவர் கவுரிசங்கர், திலகர், ஜீவன் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.
மு.க.அழகிரி தேனியில் போட்டியிட கோரி மாவட்டச் செயலாளர் மூக்கையா மனு அளித்தார்.