இந்த மோசடிப் பணம் எங்கேதான் போகுது?

அமெரிக்காவில் ஒரு மோசடிப் பேர்வழி சிக்கியிருக்கிறார். இவர் சத்யம் ராஜுவுக்கே குரு எனலாம்.
வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரும் நிதி மோசடி செய்த பெர்னார்டு மேடாஃப்தான் அவர். இப்போது அமெரிக்கப் போலீஸ் தன் மேல் சுமத்தப்பட்ட 11 குற்றங்களையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது செயலுக்கு வெட்கப்படுவதாகவும், வேதனை அடைவதாகவும் கடைசி நேரத்தில் கதறும் மேடாஃபுக்கு 150 ஆண்டுகள் வரை கூட தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
யார் இந்த பார்ட்டி அமெரிக்காவின் மிகப் பிரபலமான பைனான்ஸியர்தான் இந்த மேடாஃப். பொதுமக்களிடம் ஏராளமான டெபாஸிட்டுகளை வாங்கிக் குவித்தவர், ஒரு கட்டத்தில் நம்ம ஊர் ராமலிங்க ராஜு ஸ்டைலில், எல்லாமே மாயை, என்னிடம் ஒன்றுமே இல்லை என கைவிரித்துவிட, முதலீட்டாளர்கள் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்கள்.
இவர் மோசடி செய்துள்ள தொகை ஒரு கோடி ரெண்டு கோடியல்ல... 65 பில்லியன் டாலர்கள். ராமலிங்க ராஜுவெல்லாம் இவர் முன் ஜுஜுபி!
70 வயதாகும் இந்த மேடாஃப், வால் ஸ்ட்ரீட்டின் தலை எழுத்தையே நிர்வணயிக்கும் அளவு பிரபலமான, சக்தி மிக்க மனிதராகத் திகழ்ந்தார்.
யாருமே சந்தேகம் கொள்ளாத அளவுக்கு வெகு திறமையாக தனது மோசடிகளைத் தொடர்ந்தார். ஆனால் கடந்த நவம்பர் மாதம் மாட்டிக் கொண்டார். மூன்று மாதகாலம் அவரை மன்ஹாட்டனிலுள்ள அவரது காஸ்ட்லி அரண்மனையில் சிறை வைத்து விசாரித்தனர் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள்.
பொதுமக்களிடம் முதலீடு, பங்கு வர்த்தகம் என்ற பெயரில் இவர் ஏய்த்துள்ள தொகை மட்டும் 65 பில்லியன் டாலர்கள் என்பதை அறிந்து விக்கித்துப் போய்விட்டது அமெரிக்க புலனாய்வுத் துறை. உலக அளவில் பெரும் அதிர்ச்சி மற்றும் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மோசடி இது என வர்ணிக்கிறார்கள் அதிகாரிகள்.
கடந்த வாரம் முறையாக கைது செய்யப்பட்ட மேடாஃப், நேற்று அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட நீதிபதி முன் நிறுத்தப்பட்டார்.
தன் மீதான 11 குற்றச்சாட்டுகளையும் பொறுமையாகக் கேட்ட மேடாஃப், அனைத்தப குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொல்வதாகவும், தனது அசிங்கமான நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 'சின்ன தவறுதானே, சரி செய்துவிடலாம் என்றுதான் பொதுமக்களின் முதலீட்டில் கைவைக்கத் தொடங்கினேன். ஆனால் அதுவே போகப்போக விடமுடியாத கெட்ட பழக்கமாகி, பின்னர் ஒரு போதை மாதிரியாகிவிட்டது. இப்போது மீள முடியாத துயரத்தில் தள்ளிவிட்டது', என்று கூறியுள்ளார்.
அவரது கதையை முழுக்கக் கேட்ட நீதிபதிகள், 'இவரை நிச்சயம் ஜாமீனில் விடமுடியாது என்றும், தன் வயது மற்றும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இவர் தப்பிக்க முயலக்கூடும். எனவே சிறையிலேயே வைத்திருங்கள்' என்று கூறியுள்ளனர்.
புரியாத புதிர்!
பொதுவாகவே இம்மாதிரி வழக்குகள் இந்தியாவில் நடந்தாலும் சரி, வேறு எந்த நாட்டில் நடந்தாலும் சரி... தெரிய வேண்டிய முக்கிய உண்மை மட்டும் கடைசிவரை வெளிவராமலேயே போகின்றன.
முன்பு, இந்திய நிதி நிறுவனங்கள் வரிசையாக பொதுமக்களை ஏமாற்றிவிட்டு காணாமல் போயின. அந்த நிதி நிறுவன அதிபர்கள் சிறைக்குப் போனார்கள், இன்னும் கூட வழக்கு நடக்கிறது. ஆனால் மோசடி செய்த பணத்துக்கு என்ன கணக்கு? அது எங்கே பதுக்கப்பட்டது? என்பது மட்டும் தெரியவே இல்லை.
சத்யம் ராமலிங்க ராஜு விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஏமாற்றிய தொகை ரூ.7800 கோடிகள். கணக்கை வேண்டுமென்றே உயர்த்திக் காட்டியதால் இந்த மோசடி நடந்தது என்று ராஜு தெரிவித்தார். ஆனால் விசாரணையில், சத்யம் நிறுவனத்துக்கு உண்மையிலேயே நல்ல வருவாய் ஆதாரம் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, ராஜு மோசடி செய்துள்ளது கற்பனையான தொகையை அல்ல. அது உண்மையான பணம். அப்படியெனில் ரூ.7800 கோடி எங்கே பதுக்கப்பட்டது?
போலீசுக்கும் இந்த உண்மை தெரியவில்லையா?
அல்லது தெரிந்தே வெளியில் சொல்லாமல் மறைக்கிறார்களா?
அல்லது சம்பந்தப்பட்ட நிதிநிறுவன அதிபர் மாட்டிக் கொண்டு உண்மையை ஒப்புக் கொண்டதால், அந்தத் தொகை முழுவதையும் அப்படியே டீலில் விட்டு விடுகிறார்களா, 'நல்லெண்ணத் தள்ளுபடி' மாதிரி?!
இதையும் தாண்டி வேறு ஏதாவது உள்குத்து இருக்கிறதா...?
- ஒன்றுமே புரியவில்லை மக்களுக்கு.
அவர்களும் பாவம் எத்தனை மோசடிகளைத்தான் நினைவில் வைத்திருப்பார்கள். ஒரு மோசடியின் பரபரப்பு மறையும் முன்பே அடுத்த மோசடி ஹைலைட்டாகி விடுகிறது. அல்லது அப்படிச் செய்துவிடுகிறார்கள், நம்ம ஊரில் பிரச்சினையை திசை திருப்ப நடிகைகளை விபச்சார வழக்கில் கைது செய்வது போல!
இந்த மேடாஃப் விவகாரமும் அப்படியே...!
மாட்டிக் கொண்ட பிறகு நீதிபதிகள் முன்னிலையில் நீலிக் கண்ணீர் வடிக்கும் மேடாஃப், தான் மக்களிடம் கொள்ளையடித்த 65 பில்லியன் டாலர்களை என்ன செய்தார்? எந்த தீவில் புதைத்து வைத்திருக்கிறார்? போலீசும் மௌனம் சாதிக்கிறது. மேடாஃபும் வாய் திறக்கவில்லை.
ஆக, பெரிய அளவில் திருடினால் மரியாதையான ஜெயில் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன பல்வேறு நாட்டு சட்டங்களும்.
இதில் ஒரே ஒரு ஆறுதல்... மேடாஃபுக்கு 150 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என்கிறது அமெரிக்க சட்டத்துறை.
ஆனால் நம்ம ஊரில் சத்யம் ராஜுவுக்கு தண்டனை என்று ஒரு சில ஆண்டுகளாவது கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். காரணம் அவருக்குப் பின்னால் உள்ள அரசியல் புள்ளிகளின் சக்தி அப்படி. யார் கண்டார்! இன்னும் சில வாரங்களில் தேர்தல் பொழுதுபோக்கில் மக்கள் மூழ்கிப் போயிருக்கும் ஒரு தருணத்தில் ராஜு பிரதர்ஸ் பெயிலிலும் வரலாம்...பின்னர் 'செடானி'லோ 'பிஎம்டபிள்யு'விலோ டாட்டா காட்டியபடி கவுரவமாக நீதிமன்றம் வந்தும் போகலாம்...!
இது மக்களாட்சிதானே... அதாவது மக்கள் மீது ஏறி நின்று ஆளும் ஆட்சி!












Click it and Unblock the Notifications