''நல்ல பேரு''..! வைகோவுக்கு எவ்வளவு கஷ்டம்!!

மதிமுக பிரமுகரின் இல்லத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க ஸ்ரீபெரும்புதூர் வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கை ராணுவம் பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் ஈழத் தமிழர்களை மொத்தமாக ஓரிடத்தில் அடைத்து பெண்களின் கற்பை சூறையாடியும், கொலை செய்தும் வருகிறது.
இளைஞர்களை கொடூரமாக சுட்டு வீழ்த்தியும் வருகின்றனர். இதற்கு முழுக்க இந்திய அரசு துணை நிற்கிறது. உலக நாடுகளும் ஐநா சபையும் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லி வருகிறது. ஆனால் இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இன்று வரை வலியுறுத்தவில்லை.
இலங்கை தமிழர்களுக்கு எதிராக போர் நடத்துவதே இந்திய அரசுதான். தேர்தலையொட்டி மக்களை ஏமாற்றுவதற்காக மருந்துகள் இலங்கைக்கு மத்திய அரசு அனுப்புகிறது. இந்த மருந்துகள் தமிழர்களுக்காக அல்ல, இலங்கை ராணுவத்துக்காகவே அனுப்பப்படுகிறது.
இதுவரை நடந்த தேர்தல்களில் ஈழத் தமிழர்கள் பிரச்சனை பற்றி நாங்கள் பேசியது இல்லை.ஆனால் இந்த தேர்தலில் பேசுவோம்.
கடந்த 3 வருடங்களாகவே அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை பிரிக்க பல வழிகளில் சதி செய்து வருகிறார் கருணாநிதி.
நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு, மு.கண்ணப்பனின் கட்சி மாற்றம் எல்லாமே நடந்தது இதன் ஒரு பகுதியாகத்தான். கண்ணப்பன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க.
அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்றார் வைகோ.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
இதற்கிடையே மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்ற குழு, அரசியல் ஆலோசனை குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் வரும் 18ம் தேதி கட்சியின் தலைமையகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், அதிமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகள், கண்ணப்பன் விலகலால் ஏற்பட்டுள்ள சரிவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசப்படவுள்ளன.
முன்னதாக மருத்துவமனையில் இருந்த முதல்வர் கருணாநிதியை மு.கண்ணப்பன் சென்று சந்தித்தது குறித்து அறிந்த அதிமுக தலைமை வைகோவை அழைத்து, ''கருணாநிதிக்கு தூது அனுப்பியிருக்கிறீர்களா'' என்று கேட்டு ரொம்பவே நோக வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் தான் அதிமுகவிடம் மீண்டும் நல்ல பெயர் வாங்க வேண்டிய நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார். இதனாலேயே கண்ணப்பன் கட்சியை விட்டு விலகியதை வைகோ தடுக்கவும் இல்லை, கண்ணப்பனிடம் இருந்து வந்த போனைக் கூட எடுக்கவில்லை என்கின்றார்கள்.
கண்ணப்பனை வைத்து டபுள் கேம் ஆடி தன்னை அதிமுக கூட்டணியிலிருந்து பிரிக்க முதல்வர் கருணாநிதி தான் திட்டமிட்டார் என்றும் வைகோ கருதுகிறார்.
இதனால் தான் இன்றைய பேட்டியில் அதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். வைகோவுக்கு எவ்வளவு கஷ்டம்!
தேர்தல் பணிக்குழு செயலாளர் விலகல்:
இதற்கிடையே வைகோவுக்கு இன்னொரு அடியாக அக் கட்சியின் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.கே.சுப்பிரமணியம் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவரும் விரைவில் திமுகவில் இணையவுள்ளார்.
சிங்கம் போல கட்சி நடத்தி வந்த வைகோ இப்போது ஜெயலலிதாவின் கைப்பாவையாக மாறிவிட்டதால் இனியும் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்று சுப்பிரமணியம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications