கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு- ரோஜாவுக்கு நோட்டீஸ்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சந்திரகிரி தொகுதியில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியும், நடிகையுமான ரோஜாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஏப்ரல் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான தேர்தல் பிரசாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நடிகை ரோஜா சந்திரகிரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிராமம் கிராமமாக அவர் சென்று வீடு வீடாகப் போய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10ம் தேதி ஹரிபுரம் என்ற கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை கொடுதது வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இதையடுத்து இது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சீர்வரிசை என்ற பெயரில் வாக்காளர்களுக்கு அவர் பணம், பொருட்களைக் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். இதையடுத்து திருப்பதி தாசில்தாரிடம் ரோஜா விளக்கம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.