நாஞ்சில் சம்பத்துக்கு நேற்று ஜாமீன் - இன்று தேசிய பாதுகாப்பு சட்டம்
திருப்பூர்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தை திருப்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் இன்று திடீரென தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய திருப்பூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒரு ஆண்டுக்கு சம்பத்தால் வெளி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் சமீபத்தில் திருப்பூரில் நடந்த கருத்தரங்கில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் வழக்குமாறு திருப்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனு நேற்று திருப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஹரிஹரக்குமார் விசாரித்தார்.
வக்கீல்கள் ஸ்டிரைக் காரணமாக சம்பத்தே தனக்காக ஆஜராகி வாதாடி, ஜாமீன் கோரினார்.
இதையடுத்து நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், ரூ. 2 லட்சத்துகான சொந்த ஜாமீன் பத்திரம் கொடுக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து திங்கள்கிழமை சம்பத் வெளியே வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் கலெக்டர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அதுதொடர்பான உத்தரவு இன்று கோவை மத்திய சிறைக்குப் போயுள்ளது. இதனால் சம்பத்தால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
ஏற்கனவே இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோருக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.