தேமுதிகவுக்கு காங் நேரடி அழைப்பு-வி.சி சிக்கல் நீடிப்பு
டெல்லி: தேமுதிக எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் நீடிப்பதில் திமுக-காங்கிரஸ் இடையே சிக்கல் நீடிக்கிறது.
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவினர் டெல்லியில் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், எம்பி ஞானதேசிகன் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.
இவர்களும் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், இளங்கோவன், எம்பி பிரபு ஆகியோரும் காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதுடன் பேச்சு நடத்தினர்.
இரவு சுமார் 2 மணி நடந்க இந்தப் பேச்சுவார்த்தையின்போது பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்வது குறித்தும், விஜயகாந்த கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்தும் பேசப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று தங்கபாலு, இளங்கோவன் ஆகியோர் இக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர்,
இன்றைய கூட்டத்தில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
மதவாத சக்திகளை முறியடிக்கும் வகையில், தேசிய நலனைக் கருத்தில் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில், பாமக மற்றும் தேமுதிக ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவினர் சென்னை திரும்பியதும் அது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications