சுபிக்ஷா-ரூ.80 லட்சத்தை வசூலித்த பிஎப் அலுவலகம்!
சென்னை: தொழிலாளர் ஓய்வு கால வைப்பு நிதி (பிராவிடன்ட் பண்ட்) அலுவலகத்துக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.1.76 கோடியில், ரூ.80 லட்சத்தை சமீபத்தில் செலுத்தியுள்ளது சுபிக்ஷா நிறுவனம்.
மீதித் தொகையை சுபிக்ஷா கணக்கு வைத்துள்ள வங்கிகளிலிருந்து நேரடியாக பிஎப் அக்கவுண்டுக்கு மாற்றப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்ட சுபிக்ஷா நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் பிஎப் அலுவலகத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை குறித்த காலத்துக்குள் சுபிக்ஷா நிர்வாக இயக்குநர் உரிய காலத்தில் செலுத்தத் தவறியதால், அவரது வங்கிக் கணக்குகளிருந்து நேரடியாக பிடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மேலும் சுபிக்ஷாவில் 23 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ள ஐசிஐசிஐ வென்சர்ஸ் நிறுவனத்துக்கு இது தொடர்பாக ஒரு நோட்டீஸ் அனுப்பியது பிஎப் அலுவலகம். இதனை ஒப்புக் கொண்டுள்ள ஐசிஐசிஐ வென்சர்ஸ் விரைவில் இதற்கு உரிய பதில் அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் சுபிக்ஷாவில் 10 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ள அஜீம் பிரேம்ஜியின் ஜாஷ் இன்வெஸ்ட்மெண்டுக்கும் இது தொடர்பாக விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது பிஎப் அலுவலகம்.
சுபிக்ஷாவின் சென்னை மற்றும் புறநகர் கிளைகளில் பணியாற்றிய 4600 பணியாளர்களுக்குத் தரவேண்டிய பிஎப் பாக்கிதான் இந்த ரூ.176 கோடி ரூபாயும். கடந்த ஆண்டு ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலத்தில் பணியாளர்களுக்கு சுபிக்ஷா சார்பில் செலுத்தப்பட வேண்டிய பிஎப் தொகை செலுத்தப்படாமலேயே இருந்ததால் இந்த நடவடிக்கையில் இறங்கியது வைப்பு நிதி அலுவலகம்.












Click it and Unblock the Notifications