பிரச்சாரத்தின் போது அத்வானி-சோனியாவை கொல்ல சதி

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 16ம் தேதி துவங்குகிறது. இதையடுத்து நாட்டின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய உளவுத்துறை முக்கிய தலைவர்களை கொல்ல பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக கூறியுள்ளது.
சமீபத்தில் இந்திய, பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி இரண்டு தீவிரவாதிகள் பேசிக் கொண்டதை தாங்கள் அறிந்து கொண்டதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் எந்த தலைவர்களை குறிவைத்துள்ளனர் என்பது தெரியவில்லை.
தேர்தல் சமயத்தில் இந்த சதி செயல்களை அரங்கேற்றி, அதன் மூலம் உலக மீடியாவை தங்கள் பக்கம் திருப்ப இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,
தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். காவல் துறையினர் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும். காஷ்மீரில் 6000 போலீசார் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து டெல்லி சென்றவுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். வரும் 2010க்குள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications