போலீஸ் மிரட்டல்-ஜீயரை மீட்க கோரியவர் புகார்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஜீயர் லட்சுமண் ராமானுஜ ஜீயரைக் கண்டுபிடித்துத் தரக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்த தன்னை மிரட்டி வருகிறார்கள் என வழக்கு தொடர்ந்த கோவிந்த ராமானுஜ தாசர் கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. நூற்றாண்டு பழமையும், பல கோடி ரூபாய் சொத்துக்களும் உள்ள இந்த மடத்தின் ஜீயர், ஸ்ரீலட்சுமண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் (83).
கடந்த 20ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. அவரை போலீஸார் கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து தான் கொல்கத்தாவில் இருப்பதாக ராமானுஜ ஜீயர் போன் மூலம் தெரிவித்தார்.
இந் நிலையில், கோவிந்த ராமானுதாசர் இன்று காலை ஸ்ரீரங்கம் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் ஜீயர் மாயமானது தொடர்பாக உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளேன்.
கடந்த 11ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஜீயர் சுவாமியை ஆஜர்படுத்தப்போவதாக அறிந்து சென்றோம். ஆனால் சுவாமியை ஆஜர்படுத்தவில்லை. ஜீயர் சுவாமி உயிருடன் இருக்கிறாரா? என்றும் தெரியவில்லை. இதற்கிடையே இம்மனுவை வாபஸ் பெறக் கோரி ஸ்ரீரங்கம் போலீசார் என்னை மிரட்டுகின்றனர்.
சேது சமுத்திர திட்டத்தில் மாற்று வழிப் பாதைக்கும், தசாவதாரம் படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரியும் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வெற்றி பெற்றேன்.
அதேபோல ஸ்ரீரங்கம் ஜீயர் மாயமான வழக்கில் மனுவை வாபஸ் பெறச் சொல்லி போலீசார் மிரட்டுவதால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்யப் போகிறேன் என சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் தெரிவித்துள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications