எந்த நேரத்திலும் சுனாமியாக மாறுவோம் - போலீஸார் துண்டுப் பிரசுர பிரசாரம்
சென்னை: நாங்கள் அமைதிப்பட வீரர்கள், எங்களது அமைதி ஆழ்கடலின் அமைதியைப் போன்றது. ஆனால் எந்த நேரத்திலும் நாங்கள் சுனாமியாக மாறுவோம் என்று சென்னை நகரில் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றக் கலவரம் தொடர்பாக, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், வட சென்னை காவல்துறை இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது போலீஸார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. போலீஸாரே இவற்றை விநியோகித்துள்ளனர். பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் இவை விநியோகிக்கப்பட்டன. பொதுமக்களிடமும் இவற்றை போலீஸார் விநியோகித்ததாக தெரிகிறது.
அதில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் ..
- வக்கீல்கள் சட்டம் என்ற இரும்பு தூணை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அந்த இரும்பு தூணை காப்பாற்றும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அமைதிப்படை வீரர்கள். எங்களின் அமைதி ஆழ்கடலை போன்றது. ஆனால் அது எந்த நேரத்திலும் சுனாமியாக மாறும்.
- நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணாவின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்ப்பு நகலை எரித்து வக்கீல்கள் கீழ்த்தரமாக போராட்டம் நடத்தினார்கள். இதற்கு நீதியரசர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தகுந்த பாடம் புகட்ட முன்வரவேண்டும்.
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநிறுத்த போலீசார் தயாராகி விட்டார்கள். வக்கீல்கள் தயாராவது எப்போது?
- இந்திய தண்டனை சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் போலீசார் தடியடி நடத்தி கடமையை நிறைவேற்றினார்கள்.
- ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவை இன்று சில வக்கீல்களால் வேறோடு பெயர்ந்துவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை காப்பாற்றுவது அனைவரின் கடமையாகும்.
- உயர்நீதிமன்றம் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும், சுனாமியாக மாறுவோம் என்று கூறி போலீஸார் விநியோகித்துள்ள இந்த துண்டுப் பிரசுரங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.