வன்னி போரில் தமிழ் நிவாரணப் பணியாளர் பலி
ஜெனீவா: சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவி நிறுவனமான கேர் இன்டர்நேஷனல் அமைப்பின் பணியாளர் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரது பெயர் சபேசன். 24 வயதாகும் அவர் கேர் நிறுவனத்தின் சார்பில் போர்ப் பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்பு வலையப் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நடந்த எறிகணைத் தாக்குதலில் சபேசன் கொல்லப்பட்டார்.
படுகாயமடைந்த நிலையில்இருந்த அவருக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. இதனால்தான் மரணமடைந்ததாக கேர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிக் ஓஸ்பார்ன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓஸ்பார்ன் கூறுகையில், போரினால் படுகாயமடைந்த மக்கள் படும் அவதி மிக மோசமாக உள்ளது. நிவாரணப் பணியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
அப்பகுதிகளி்ல் சிக்கியுள்ளவர்களுக்கு பெருமளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உணவு இல்லை. மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்றார்.