வெறி்ப் பேச்சு-வருண் காந்திக்கு முன் ஜாமீன்

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வருண் காந்தி அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், முஸ்லிம்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசினார்.
இது குறித்து தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில், வருண் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதே போல தான் கைது செய்யப்படுவதைத் தவி்ர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் முன் ஜாமீனும் வழங்கியது.
தேர்தல் கமிஷனுக்கு பதில்...:
இதற்கிடையே இந்த விவகாரத்தி்ல் தனக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர் இன்று காலை அவசரமாக பதில் மனு அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு தனது வக்கீல்களுடன் சென்று இந்த பதில் மனுவை அவர் தாக்கல் செய்தார்.
எங்களுக்கு சம்பந்தமில்லை... பாஜக:
இதற்கிடையே வருண் காந்தியின் பேச்சுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக கூறியுளளது. வருண் காந்தியின் பேச்சு தொடர்பாக பாஜகவுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பதில் தாக்கல் செய்யவுள்ள பாஜக, வருண் பேச்சு அவரது தனிப்பட்ட விவகாரம். இதில் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறவுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே வருண் காந்திக்கு பாஜகவின் தாமரை சின்னம் தரப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
வருண் தான் நிரூபிக்க வேண்டும்.. தேர்தல் ஆணையம்:
இந் நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறுகையில், வருணின் பேச்சு அடங்கிய சிடியை பார்த்துவிட்டுத் தான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக வருண் கூறியிருக்கிறார். அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் உண்டு. அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதா இல்லையா என்ற பிரச்சனை வேட்பு மனு தாக்கல் பரிசீலனையின்போது தான் எழும் என்றார்.
தான் அவ்வாறு பேசவில்லை என்று வருண் நிரூபி்க்காவிட்டால் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கலாம் என்று தெரிகிறது.
வருண் மீது வாக்காளர்களுக்கு பணம் தந்ததாக இரு வேறு வழக்குகளும் பதிவாகியுள்ளது நினைவுகூறத்தக்கது.
வருணை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் கைது செய்ய உத்தரப் பிரதேச போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
மாவாயதியும் அதிரடி நடவடிக்கை:
இதற்கிடையில் பிலிபிட் தொகுதி பாஹீரா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியின் பேச்சு, மத விரோதத்தை தூண்டும் வகையில் இருந்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அவரை அரசு சஸ்பெண்ட் செய்ததாக தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் பிலிபிட் கூடுதல் மாவட்ட கலெக்டர் கமால், கூடுதல் எஸ்.பி., சவுரவ் குஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிரசார குழுவில் இருந்து வருண் நீக்கம்:
இந் நிலையில் வருண் காந்தியின் பேச்சால் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ள பாஜக அவரை தனது பிரச்சாரக் குழுவில் இருந்து நீக்கியுள்ளது.
சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் விதியின்படி, கட்சிகள் சார்பாக பிரச்சாரம் செய்யும் தலைவர் யாராவது விதியை மீறினால் அந்த கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய பிரசார குழுவினர் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பாஜகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரகர்களாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் வருண் காந்தியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந் நிலையில், வருணை பட்டியலில் சேர்த்தால் கட்சியும் வழக்கில் சிக்கும் என்பதால் அவரது பெயரை பாஜக நீக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications