இன்று திமுகவில் இணைகிறார் கண்ணப்பன்
சென்னை: மதிமுகவிலிருந்து விலகியுள்ள மு.கண்ணப்பன் இன்று திமுகவில் இணைகிறார். தன்னுடன் 10 ஆயிரம் பேர் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதிமுகவில் அவைத் தலைவராக இருந்து வந்த கண்ணப்பன் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து அவரை சந்தித்த அமைச்சர் ஸ்டாலின், திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற கண்ணப்பன் திமுகவில் இணைய முடிவு செய்தார்.
இந்த நிலையில் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் மீண்டும் இணைகிறார் கண்ணப்பன்.
முன்னதாக நேற்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் கண்ணப்பன்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் நானும் என்னுடன் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், என்னுடன் ம.தி.மு.க.வில் இருந்த 10 ஆயிரம் தோழர்கள் தாய் கழகமான தி.மு.க.வில் இணைகிறோம்.
இது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கலந்து பேசி, அவரை விழாவிற்கு அழைக்க நேரில் வந்தேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தாய் கழகத்தில் இணைகிறேன். பிரதிபலன் கருதி நான் தி.மு.க.வில் இணையவில்லை.
திமுகவில் இருந்தபோதும் நான் எதையும் கேட்டுப் பெறவில்லை. இப்போதும் அப்படியே இருப்பேன் என்றார் கண்ணப்பன்.