மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிடட்டுமே பார்ப்போம் - அத்வானி சவால்
செபா (அருணாச்சலப் பிரதேசம்): அடுத்த பிரதமரும் மன்மோகன் சிங் தான் என்று காங்கிரஸ் கூறியிருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம், மன்மோகன் சிங் ராஜ்யசபா வழியாக பிரமதர் ஆகாமல், லோக்சபா தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி சவால் விட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் செபா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அத்வானி. அப்போது அவர் கூறுகையில், தங்களது கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஒரு வழியாக சோனியா காந்தி அறிவித்து விட்டார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் பிரதமராகக் கூடியவர் மக்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவராக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமானால் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களின் ஆதரவுடன் எம்.பி. ஆகி நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்.
எனவே மன்மோகன் சிங்கும், ராஜ்யசபா வழியாக பிரதமர் பதவிக்கு வராமல், லோக்சபா தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும். மக்களின் ஆதரவுடன் அவர் வெல்ல முன்வர வேண்டும்.
அமெரிக்காவில் இருப்பதைப் போல பல்வேறு பிரச்சினைகள் குறித்து டிவி மூலமாக பொது விவாதம் நடத்த, நேருக்கு நேர் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். பிரதமர் தயாரா என்பதை அவர் சொல்ல வேண்டும்.
நமது நாடு இதுவரை கண்ட பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர் மன்மோகன் சிங்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 10 ஜன்பாத் இல்லத்திலிருந்து (சோனியாவின் வீடு) பச்சைக் கொடி காட்டாமல் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது.
பிரமர் அலுவலகத்தில் உள்ள ஒரு அமைச்சர் பிரதமரின் திட்டங்கள், முடிவுகளை சோனியாவிடம் கொண்டு சென்று அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகே அவற்றை பிரதமரால் அறிவிக்க முடிகிறது. சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் மன்மோகன் சிங்கால் நகரக் கூட முடியாது.
கெளடாவை விட மன்மோகன் மோசம் ..
லோக்சபா எம்.பியாகி, பிரதமரான தேவே கெளடா கூட நிறைய அதிகாரங்களை கையில் வைத்திருந்தார்.
வட கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.ஏ.சங்மா திரட்டி வருகிறார். இதை நான் வரவேற்கிறேன் என்றார் அத்வானி.
முன்னதாக அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா நகரில் நடந்த கூட்டத்தில் அத்வானி பேசுகையில், இப்போதுதான் பாமக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டுப் போய் விட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நாளுக்கு நாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பலவீனமடைந்து வருகிறது. நாங்கள் பலம் பெற்று வருகிறோம்.
காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்காக அஸ்ஸாம் கண பரிஷத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து வருகிறது என்றார் அத்வானி.
எப்படி நாட்டுக்குத் தலைமை தாங்குவார்?:
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், தேர்தலில் போட்டியிடவும் முடியாது. டிவி ஸ்டேஷனுக்கு வந்து அத்வானியுடன் விவாதம் புரியவும் முடியாது. கேட்டால், பிரதமரின் உடல் நிலையாக் காரணம் காட்டுகிறார்கள்.
டிவி ஸ்டேஷனுக்கு வந்த விவாதமே நடத்த முடியாத ஒருவர் நாட்டை எப்படி தலைமை தாங்கி நடத்த முடியும். எப்படி அவரால் பிரதமராக செயல்பட முடியும்.
தனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே மன்மோகன் சிங் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அதிலும் கூட தோற்றுப் போய் விட்டார் என்றார் மல்ஹோத்ரா.












Click it and Unblock the Notifications