தமிழகம் வந்தது துணை ராணுவப் படை-பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை: சென்னை நகரில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3,772 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில் 900 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை வட சென்னையில் தான் உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் மே 13ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணிகளை கட்டுக்கோப்புடன் முடிக்க தேர்தல் ஆணையம் பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. துணை ராணுவத்தையும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தி வருகிறது.
முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்கும் சாவடிகள், கடந்த தேர்தலில் சராசரி அளவைவிட 10 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு நடந்த சாவடிகள், ஒரே வளாகத்தில் 10 வாக்கு சாவடிகளுக்கு மேல் உள்ள சாவடிகள் ஆகியவை பதற்றமான வாக்கு சாவடிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த 920 வாக்கு சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வாக்கு சாவடிகளுக்கு துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு முழுவதும் இங்கு வீடியோவில் பதிவு செய்யப்படும்.
மேலும் பதற்றமான வாக்கு சாவடிகளில் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. எனவே மத்திய அரசு ஊழியர்கள்தான் இங்கு தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவர்.
ஏற்கனவே சென்னை வந்துவிட்ட அதிவிரைவு துணை ராணுவ படையினர் இந்த பதற்றமான வாக்கு சாவடிகள் அமையும் இடங்களை ஆய்வு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
வடசென்னை பகுதியில் தான் அதிகபட்ச பதற்றம் நிறைந்த சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. கொருக்குப்பேட்டை தண்டையார் பேட்டை, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கைiர், எம்.கே.பி.நகர், சர்மா நகர், புதுவண்ணாரப்பேட்டை, கல்மண்டபம், பேசின்பிரிட்ஜ், எழில்நகர், கன்னிகாபுரம், பட்டாளம், ஓட்டேரி, எம்.ஆர்.நகர், வியாசர்பாடி, ஆகிய வாக்கு சாவடிகளை நேற்று துணை ராணுவத்தினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
திண்டுக்கல் வந்த படை:
அதே போல திண்டுக்கல்லில் தேர்தல் பணியில் ஈடுபட 11 பெண்கள் உள்ளிட்ட 95 பேர் துணை ராணுவ படை ஒன்று வந்திறங்கியுள்ளது.
இவர்கள் திண்டுக்கல் தொகுதியில் பதட்டமான பகுதிகளாக அறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் இவர்கள் திண்டுக்கல் தொகுதியில் இருக்கம் பழனிக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பழனி மலை கோயிலுக்கு சென்றனர். இது குறித்து துணை ராணுவ படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தலின் போது உண்டாகும் சிக்கல்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள பதட்டமான இடங்களை ஆய்வு செய்தோம் என்றார்.