பாலிஷ் போடுவதாக நகை திருட முயன்ற கும்பல்
அம்பை: அம்பை அருகே தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி அவற்றை திருட முயன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அம்பை அருகே தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகள் பேச்சியம்மாள். இவரது கணவர் அருள்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து பேச்சியம்மாள் தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 10 பேர் கொண்ட கும்பல் இருபிரிவாக பிரி்ந்து தெற்கு பாப்பன்குளத்திற்குள் நுழைந்துள்ளது. அங்கு வீடு வீடாக சென்று தங்கம், வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியது.
அந்த கும்பலில் இருந்த 6 பேர் பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்று ரூ. 25க்கு நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து பேச்சியம்மாள் தனது வெள்ளி கொலுசுக்கு பாலிஷ் போட கொடுத்துள்ளார். கொலுசை பாலிஷ் போட்டு கொடுத்துவிட்டு அந்த கும்பல் பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த 10 கிராம் எடையுள்ள தங்க செயினை கேட்டுள்ளனர். பேச்சியம்மாளும் செயினை கழற்றி கொடுத்துள்ளார்.
அப்போது அந்த கும்பல் ஒரு கோப்பையில் ஆசிட் கலந்த கலவையை ஊற்றி தங்க செயினை போட்டுள்ளனர். அப்போது செயின் 2 கிராம் எடையுள்ள துகள்களாக உருகி விட்டது. அந்த துகள்களை பேச்சியம்மாளிடம் கொடுத்துவிட்டு அந்த கும்பல் ஓடமுயன்று உள்ளது. அப்போது பேச்சியம்மாள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 6 பேரையும் பிடித்தனர்.
இதுபோல் பக்கத்து தெருவில் முருகன் என்பவரது வீட்டில் பாலிஷ் போட்ட மற்றொரு 4 பேர் கொண்ட கும்பலும் ஓடமுயன்றது. அவர்களையும் பிடித்து கல்லிடைக்குறிச்சி போலீசில் ஓப்படைத்தனர். இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கார்க் உத்தரவுபடி அம்பை டிஎஸ்பி ராஜமோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அக்பர்கான் ஆகியோர் பிடிபட்ட 10 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பீகார் மாநிலம் சிப்போல், மதுரா மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார், அப்புகுமார், தேவஷா, ஸ்ரீகாந்தஷா, பவன்குமார்ஷா, சுரேன்குமார், பாபுகுமார், சந்தனகுமார், விபேத் தர்ஷா, லலித்குமார் சர்மா, ஆகிய 10 பேர் என்பது தெரிந்தது. அவர்களிடம் பாலிஷ் போட பயனபடுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications