ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி- விஜய டி ராஜேந்தர்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில், தனித்த தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் தனது கட்சி கூட்டணி அமைக்க இருப்பதாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
டி ராஜேநதரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று 29ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், நம் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை தலைவர் விஜய டி.ராஜேந்தருக்கு இந்த பொதுக்குழு முழு மனதோடு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் டி ராஜேந்தர் பேசுகையில்,
இலங்கையில் வாடும் அப்பாவி தமிழர்களை கை கழுவியவர்களை, தமிழ்நாட்டு மக்கள் கை கழுவுவார்கள். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாக, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நேற்று வரை கைகட்டி வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள் வெற்றியைத் தட்டிப் பறிக்கப் பார்க்கிறார்கள்.
பிராய்ச்சித்தம் தேடுங்கள்...
காங்கிரசுக்கும், கருணாநிதிக்கும் ஒரு கோரிக்கை. காலம் கடந்தாவது தேடுங்கள் பிராயச்சித்தம். இனிமேலாவது செய்யுங்கள் இலங்கையில் போர் நிறுத்தம். பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதிக்கு கடிதம் எழுதினால் போதாது, இலங்கை மண்ணில் இருக்கும் எம் தமிழர்கள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும்.
தமிழீழ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தனித் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த கருத்துகளோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்களிடம் மட்டுமே லட்சிய திமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என்றார் டி ராஜேந்தர்.