திமுக நேர்காணல் முடிந்தது-புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று முன்தினம் நேர்காணல் தொடங்கியது. முதல் நாள் 10 தொகுதிகளுக்கு விண்ணப்பித்த 214 பேரிடமும், நேற்று 6 தொகுதிகளுக்கு விண்ணப்பித்த 216 பேரிடமும் நேர்காணல் நடைபெற்றது.
இந் நிலையில் மனித நேய மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர்களுக்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதால் நேர்காணலை திமுக நிறுத்துவிட்டு அந்தக் கட்சியுடன் பேச்சு நடத்தியது.
ஆனால், மனித நேய மக்கள் கட்சி தொடர்ந்து 2 தொகுதிகள் கேட்க, ஒரு இடம் தான் தர முடியும் என திமுக கூறிவிட்டது. இதையடுத்து உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து மிச்சமிருந்த வடசென்னை, தென்சென்னை, தஞ்சை, நாகை, தர்மபுரி ஆகிய 5 தொகுதிகளுக்கான இன்று நேர்காணல் நடந்தது.
இதையடுத்து நிருபர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?
பதில்: கடந்த 3 நாட்களாக திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்த 540 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கேள்வி: பிரச்சாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?
பதில்: வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அது குறித்த அறிவிப்பு வரும்.
கேள்வி: வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு இருக்குமா?
பதில்: நிச்சயமாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு உண்டு.
கேள்வி: பாஜக தேர்தல் அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: அதுகுறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்றார் கருணாநிதி.
இதையடுத்து இன்றோ அல்லது நாளையோ திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று தெரிகிறது.
திமுக வேட்பாளர் பட்டியலில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அழகிரி, அமைச்சர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன், ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன், தமிழச்சி தங்கபாண்டியன், கயல்விழி ஆகியோரின் பெயர்கள் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
முன்னதாக நேற்று முன் தினமும் நேற்றும் அஷ்டமி, நவமி என்பதால் அதிமுக தரப்பு தேர்தல் தொடர்பாக எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அந்த தினங்களில் தான் திமுக வேட்பாளர் தேர்வு நடந்துள்ளது.
அதே போல காங்கிரஸ் கட்சியும் அஷ்டமி, நவமி பார்க்காமல் வேட்பு மனுக்களை வாங்கியது. இதனால் நேற்று முன் தினமும் நேற்றும் திமுக, காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்புடனும் காணப்பட்டன.
ஆனால், அதிமுக அலுவலகத்தில் ஒரே நிசப்தம்.
வி.சி. வேட்பாளர்கள்:
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைத் சிறுத்தைகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருமாவளவன் தலைமையில் 6ம் தேதி நடக்கிறது.
இதில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளன. சிதம்பரத்தில் திருமாவே போட்டியிடவுள்ளார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications