தமிழகத்தில் கடும் வெயில்-சேலத்தில் 102
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இப்போதே தமிழக நகரங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில் 102 டிகிரியை வெயில் தொட்டுள்ளதால் கடும் வெப்பத்தில் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளது. இருப்பினும் முழு வீச்சுக்கு அது வரவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
தமிழகத்தின் அனைத்துப் பெருநகரங்களிலும் கடும் வெயில் அடிக்கிறது. சேலத்தில் நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.
அதேபோல வேலூரில் 100 டிகிரி, திருச்சியில் 98, சென்னையில் 94 என வெயில் வெளுத்துக் கட்டியது.
சென்னை மீனம்பாக்கத்தில் (புறநகர்ப் பகுதிகளில்) 96 டிகிரி வெயில் பதிவானது. தூத்துக்குடியிலும் 94 டிகிரிக்கு வெயில் கொளுத்தியது. மதுரையிலும் இதே நிலைதான்.
கடலோர மாவட்டங்களில் பிற்பகலுக்கு மேல் காற்று வீசத் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. இருப்பினும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
கோடைகாலம் முழு அளவில் தொடங்க ஆரம்பித்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் இரவு நேரங்களில் பனி விழுவதால் ராத்திரி நேரங்களில் சற்று குளுமை காணப்பட்டது.












Click it and Unblock the Notifications