நவீன்-பவார் புது கூட்டணி, காங் அதிர்ச்சி
பல்சூர்: ஒரிஸ்ஸாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக்குடன் இணைந்து ஒரே மேடையில் கூட்டாகப் பிரசாரம் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க போவதில்லை என அறிவித்தது. கட்சிகளுடன் மாநில அளவில் மட்டுமே கூட்டணி வைக்க முடிவு செய்தது.
இதையடுத்து ஒரு மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள சில கட்சிகள் பிற மாநிலங்களில் எதிர் கூட்டணியில் போட்டியிட்டு வருகின்றன. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இதற்கு நல்ல உதாரணம்.
மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் பவார், ஒரிஸ்ஸா மாநிலத்தில் காங்கிரசின் பிரதான எதிரியான பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளார். இதையடுத்து ஒரிசாவில் சமீபத்தில் நடக்கவிருந்த மூன்றாவது அணி மாநாட்டில் அவர் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால், காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்க கூட்டத்துக்கு போகாமால் மூன்றாவது அணி தலைவர்களுக்கு மொபைலில் ஆதரவை தெரிவித்து விஷயத்தை முடித்தார்.
தற்போது பவார், நவீன் பட்நாயக்குடன் இணைந்து ஒரிசாவி்ல் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் குறித்து எதுவும் வாய் திறக்காத பவார், அங்கு பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்.
தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில்,
ஒரிஸ்ஸா அழகான மாநிலம். இங்குள்ள மக்கள் அமைதியானவர்கள். ஆனால் பாஜக ஒரிஸ்ஸாவுக்கு தவறான வழியைக் காட்ட முயல்கிறது.
பாஜகவினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கருதி தான் நவீன் பட்நாயக் அவர்களுடன் கடந்த 11 ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருந்த கூட்டணியைத் முறித்து கொண்டார். அதனால் தான் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
குஜராத்தில் கலவரத்தை தூண்டி மக்களை மத அடிப்படையில் பிரித்த நரேந்திர மோடி இங்கு பிரசாரத்துக்கு வரவிருக்கிறார். அவரிடத்தில் நீங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி பிறந்த மாநிலத்தின் பெருமையை மோடி அழித்துவிட்டார்.
ஒரிஸ்ஸாவில் ஒரு மக்களவைத் தொகுதியிலும் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுகிறோம்.
இந்தியாவின் சிறந்த முதல்வர் நவீன் பட்நாயக் தான் என பல சர்வேக்களும் தெரிவித்துள்ளன. அவர் நேர்மையானவர். அவர் மீது இங்குள்ள மக்கள் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர் என்றார் சரத்பவார்.