ராஜேந்தரின் லதிமுகவில் இணைந்த மன்சூர் அலிகான்

டி.ராஜேந்தருக்கு சால்வை அணிவித்து வீர வாளை பரிசாக வழங்கி லட்சிய திமுகவில் மன்சூர் இணைந்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜேந்தர்,
தமிழ் இன உணர்வாளரான மன்சூர் அலிகான் லட்சிய திமுகவில் தன்னை இணைந்துள்ளார். இலங்கையில் கொத்து குண்டுகளுக்கும், விஷ வாயு குண்டுகளுக்கும் பலியாகும் தமிழர்களுக்குகாக குரல் கொடுக்க தன்னை லட்சிய திமுகவில் இணைத்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேச திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தகுதியில்லை. காரணம் இலங்கையில் உள்ள ராஜபக்சே அரசுக்கு உதவி செய்கிறது மத்திய அரசு. மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறது திமுக.
கடைசி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து இலங்கை தமிழர்கள் மீது பாசம் இருப்பதுபோல் நாடகமாடுகிறார் ஜெயலலிதா. அவர்களுடன் தமிழ் இன உணர்வாளராகக் காட்டி கொண்ட சிலர் (ராமதாஸ்-வைகோ-தா.பாண்டியன்) கை கோர்த்துள்ளனர்.
இலங்கை தமிழர்களுக்காக எதையும் செய்யாத விஜயகாந்த் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்கிறார். இவர்களை தோலுரித்து காட்டுவதற்காக லட்சிய திமுக சில குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி திருவண்ணாமலை, திருநெல்வேலி கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி, திருச்சி, தென்சென்னை ஆகிய 11 தொகுதிகளிலோ அல்லது அதில் சில குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்தோ போட்டியிடுவோம். இதில் ஏதாவது ஒரு தொகுதியில் மன்சூர்அலி கான் போட்டியிடுவார்.
ஜெயிக்க வேண்டும் என்ற அரிப்பெடுத்து தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை காக்க போட்டியிடுகிறோம்.
விஜயகாந்த் முதலில் தேசிய கட்சியுடன் கூட்டணி என்றார். பின்னர் மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி என்றார். நான் கை காட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இப்போது தனித்து போட்டி என்கிறார். இப்படி மாறி மாறி பேசுபவர்களுக்கு 'வேறு பெயர்' உண்டு.
தமிழர்களை காக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கார்த்திகின் நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேசி வருகிறோம். தமிழர் பாதுகாப்பு அணி உருவாக்கப்படும்.
கொடுங்கோலன் ராஜபக்சேவை மாவீரன் அலெக்ஸாண்டரோடு முதல்வர் கருணாநிதி ஒப்பிட்டுள்ளது தவறானது. இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிச்சயம் வெற்றி பெறுவார். என்றார்.
விஜய்காந்த் சினிமாவில் மட்டும்..மன்சூர்:
மன்சூர்அலி கான் கூறுகையில், இலங்கை தமிழர்களை காக்க கூட்டு பிரார்த்தனைக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் மட்டும் கதாநாயகியை காப்பாற்றுவதற்கு வில்லன்களை பந்தாடுகிறார். நிஜத்தில் தமிழர்களை பாதுகாக்க மண்டியிட வேண்டும் என்கிறார்.
ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications