சென்னை-85 சதவீத வாக்குசாவடிகள் பதட்டமானவை!

கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலின் போது சென்னையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் வாக்குசாவடிகளில் பதட்டமானவைகளை மதிப்பீடு செய்ய போலீஸ் தலைமையில் ஒரு குழுவும், தேர்தல் ஆணையம் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையம் வாக்குசாவடி இருக்கும் இடங்களில் நடந்த குற்ற செயல்களின் எண்ணிக்கை, பொது சட்ட ஒழுங்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்து வருகிறது.
போலீசார் கடைசியாக நடந்த தேர்தல், சட்ட ஒழுங்கு, குற்றச்செயல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் பதட்டமிக்க வாக்குசாவடிகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பெயர் கூற விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடைசியாக நடந்த தேர்தலில் இருந்த சட்டம் ஒழுங்கு அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 3,773 வாக்குசாவடிகளில் 3,194 பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் உள்ள 85 சதவீத வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக இருக்கி்ன்றன.
மத்திய சென்னையில் 1,165, தென் சென்னையில் 1,074, வட சென்னையில் 955 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் இங்குள்ள 90 சதவீத வாக்குசாவடிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த வாக்குசாவடிகளில் கலவரங்களும், சட்டமீறல்களும், ரவுடிகளின் அராஜகமும், வாக்குசாவடிகளை கைப்பற்றும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் கணக்கெடுப்பிற்கும் இதற்கு அதிக ஒற்றுமை இருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
இதையடுத்து தேர்தல் ஆணையம், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் பேசிவிட்டு பாதுகாப்பு குறித்த இறுதி முடிவை அறிவிக்க இருக்கிறது.
அதில் வாக்குபதிவின் போது சென்னைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து சென்னையில் துணை ராணுவப்படை குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications