சென்செக்ஸில் காளை துள்ளல்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
மும்பை: மீண்டும் 11 ஆயிரம் புள்ளிகளை தொட்டுக் கொண்டு நிற்கிறது இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ். கடந்த 6 மாதங்களில் பங்குச் சந்தை இந்த அளவு அதிக புள்ளிகளைத் தொடுவது இதுவே முதல்முறை.
இன்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு கண்டது. 10993 புள்ளிகளில் வர்த்தகம் நடந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
நிப்டியிலும் இந்த முன்னேற்றப் போக்கு தொடர்கிறது. இன்று 46 புள்ளிகள் அதிகம் பெற்று 3388 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது.
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இந்த சாதக வர்த்தகம் தொடர்கிறது. இந்த சீஸனில் அதிக லாபம் அடைந்தது ரிலையன்ஸ் நிறுவனம்தான். இந்த குழுமத்தின் ரிலையன்ஸ் இன்ப்ரா மட்டும் 160 சதவிகிதம் உயர்வு கண்டது. விரைவில் இந்த நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துவிடும் என்று கூறப்படுவதால், முடிந்தவரை அந்தப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் முதலீட்டாளர்கள்.
இன்று சத்யம் நிறுவனப் பங்குகள் 6 சதவிகித உயர்வு கண்டன. சத்யம் நிறுவனத்தை டெக் மஹிந்திரா வாங்கியிருப்பதால் தொடர்ந்து சாதகமான சூழலில் வர்த்தகம் நடக்கிறது. கடந்த ஜனவரியில் ரூ.20க்கு இந்தப் பங்குகளை வாங்கியவர்கள், இனி நல்ல லாபம் பார்க்க முடியும்.