பாளை சிறை கைதிகளுக்கு ஓட்டுரிமை- சிறைத்துறை
நெல்லை: பாளை மத்திய சிறையில் இருக்கும் 185 கைதிகளுக்கு ஓட்டுரிமை அளிக்க முயற்சிகள் செய்து வருவதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாளை சிறைதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட முடியாது. ஆனால், தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட நிர்வாக ரீதியிலான உத்திரவு அடிப்படையில் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் ஓட்டு அளிக்கும் உரிமை உள்ளது.
இதன்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 185 பேர் தேர்தலி்ல் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
ஓட்டு போடும் கைதிகளுக்கு அவர்களது பகுதியில் இருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருக்க வேண்டும். பட்டியலில் பெயர் இருந்தால் சிறையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் தபால் ஓட்டு அளிக்கலாம்.
கைதிகள பதிவு செய்யும் ஓட்டு சீட்டுகள் முறைப்படி உரிய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.