வெற்றி வாய்ப்பு எப்படி? - அதிமுகவின் ரகசிய கணக்கெடுப்பு
நெல்லை: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து தாங்கள் போட்டியிடும் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக சார்பில் ரகசியக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறதாம்.
அதிமுகவினரே இதில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும் விண்ணப்படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்ப படிவத்தில் தெருவாரியாக வாக்காளர்கள் பெயர் குறிப்பிட்டு அவர்களுக்கு நேராக வயது, தொழில், அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள், கட்சி சாராத பொதுவானவரா, அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது, உள்ளூர்க்காரரா, வெளியூர்காரரா, அவர் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க என்ன செய்ய வேண்டும், அந்த பகுதியில் உள்ள பிரச்சனை எவை, என்று கேட்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப படிவம் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் உள்ள தெருக்கள் வாரியாக அதிமுக தொண்டர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தற்போது அதிமுக தொண்டர்கள் தெரு தெருவாக அந்த விண்ணப்பங்களை வாக்காளர் பட்டியல் மூலம் சோதனை செய்து நிரப்பி வருகின்றனர்.
வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் இந்த பட்டியலை ஆய்வு செய்து தொகுதி பொறுப்பாளர்களிடம் வழங்குவார்கள்.
இந்த பட்டியலை பார்த்து ஆய்வு செய்து அதி்முக வெற்றி பெற ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் சிறப்பு வியூகம் வகுக்கப்பட்டுள்ளனவாம்.