தேர்தல்: தமிழக-கேரள எல்லை பாதை திறப்பு
செங்கோட்டை: கேரள மாநிலத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் கடந்த 5 மாதமாக சீரமைப்புக்காக அடைக்கப்பட்ட திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
இது தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். செங்கோட்டை வழியாக செல்லும் இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் அத்திவாசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
இந்த வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகளும் கேரளாவிற்கு செல்வர். மேலும் இப்பகுதியில் அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஆகிய ஐயப்ப சுவாமி கோயில்கள் அமைந்துள்ளதாலும், சபரிமலைக்கு இவ்வழியாக செல்வதும் எளிது என்பதாலும் ஒவ்வொரு தமிழ் மாத துவக்கத்தின் 5 நாட்கள், கார்த்திகை, தை, மார்கழி மாதங்களில் சுமார் 70 நாட்களும் இந்த வழியாக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வர்.
இந்நிலையில் புளியரை எஸ் வளைவு மற்றும் ஆரியங்காவு பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக உருமாறி போக்குவரத்திற்கான தகுதியை முற்றிலும் இழந்தன. இதைத் தொடர்ந்து இப்பகுதி மக்களி்ன் வேண்டுகோளை ஏற்று புளியரை எஸ்வளைவு மற்றும் ஆரியங்காவு பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தேசீய நெடுஞ்சாலை துறை நிதி ஓதுக்கீடு செய்தது.
கேரள கோட்டைவாசலில் இருந்து புனலூர் வரையிலான சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ. 26 கோடி ஓதுக்கீடு செய்தது. அதே போல் தமிழக அரசு எஸ் வளைவு பகுதியை சீ்ரமைக்க ரூ. 2.7 கோடி ஓதுக்கீடு செய்தது.
இதையடுத்து சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி துவங்கின. எஸ் வளைவு பகுதியில் அடிக்கடி ரோடு சேதமடைவதால் உயர் தொழில்நுட்ப பொறியாளர்களின் ஆலோசனைப்படி கான்க்ரீட் சாலை அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் நேற்று மாலை 5 மணி முதல் எஸ் வளைவு பகுதி சாலை போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.