3வது அணியே ஒரு ஜோக் தான்-அத்வானி
பெங்களூர்: 3வது அணியை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அது ஒரு ஜோக் என்று கூறியுள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி.
பெங்களூரில் தேசியக் கல்லூரி மைதானத்தில் அத்வானி கலந்து கொண்ட பிரசாரக் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய அத்வானி, நமது நாட்டின் அரசியல் என்பது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை மையப்படுத்தித்தான் இருந்து வருகிறது. வருகிற லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.
3வது அணி, நான்காவது அணி என்பதெல்லாம் வெறும் ஜோக்தான். அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. காங்கிரஸ், பாஜக என்ற இரு முனை அரசியலை நோக்கி நாடு போய்க் கொண்டிருக்கிறது.
45 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வசம் இருந்து வந்த நாட்டை பாஜக மீட்ட பின்னர், காங்கிரஸ், பாஜக ஆகிய இரு முனை அரசியல்தான் இந்தியாவில் இருந்து வருகிறது என்றார் அத்வானி.
மூன்றாவது அணியால் பாஜக கூட்டணிக்கும், முலாயம்-லாலு-பாஸ்வான் அமைத்துள்ள நான்காவது அணியால் காங்கிரசுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில் மூன்றாவது அணியை தாக்கி வருகிறார் அத்வானி.