நட்சத்திர சின்னம் கோரும் விடுதலை சிறுத்தைகள்
டெல்லி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னத்தை ஒதுக்கக் கோரி அக்கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் பொருளாளர் முகம்மது யூசுப் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது..
தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 1999ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல், சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. இக்கட்சிக்கு சட்டசபையில் தற்போது 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியில் நட்சத்திர அடையாளம் இடம் பெற்றுள்ளது. எனவே இதே சின்னத்தை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என விரும்புகிறது.
நட்சத்திர சின்னம் தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகியபோது, தற்போது தேர்தல் நடைமுறைகள் நடந்து வருவதால் சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நமது நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் முறையான கல்வி அறிவு இல்லாதவர்கள். எனவே வேட்பாளர்கள் தங்களைப் பற்றி வாக்காளர்கள் மனதில் பதிய வைக்க தேர்தல் சின்னம் மிகவும அவசியம்.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பான்டா மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications