பிரசாரம்..பெண்ணுடன் ஜல்சா-அமைச்சரை உதைத்த மனைவி
மும்பை: பிரசாரத்திற்குப் போவதாக கூறி விட்டு, எம்.எல்.ஏ விடுதியில் கள்ளக் காதலியுடன் ஜல்சாவில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவரை, அவரது மனைவி விடுதிக்கு நேரில் வந்து சரமாரியாக அடித்து உதைத்தார். அமைச்சரின் கள்ளக் காதலிக்கும் செமத்தியான அடி விழுந்தது.
அந்த அமைச்சரின் பெயர், எந்தத் துறை என்ற விவரத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை. ஆனால் அவர் விதர்பாவைச் சேர்ந்தவர். தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி நாக்பூருக்குப் போயிருந்தார். இன்றுதான் வருவதாக கணவரிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் நேற்று இரவு மனோரா பகுதியி்ல் உள்ள எம்.எல்.ஏ. விடுதிக்குப் போனார்.
அங்கு முதல் மாடியில் உள்ள அவரது அறையில் ஏற்கனவே அமைச்சரின் கள்ளக் காதலி காத்திருந்தாராம். உள்ளே போன அமைச்சர் அறையைப் பூட்டிக் கொண்டார்.
இந்த நிலையில், அமைச்சரின் மனைவி எம்.எல்.ஏ. திடீரென விடுதிக்கு வந்தார். அமைச்சரின் அறைக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த அமைச்சர் மனைவியைப் பார்த்து அதிர்ந்து போனார்.
கணவர், இன்னொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது மனைவி அங்கேயே அமைச்சரை சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் உள்ளே புகுந்து அவரது கள்ளக் காதலியையும் சரமாரியாக அடித்து உதைத்தார்.
இந்த திடீர் சம்பவத்தால் எம்.எல்.ஏ. விடுதியே ஆடிப் போனது.
கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சில காலமாகவே அவரது மனைவிக்கு சந்தேகம் இருந்ததாம். இந்த நிலையில்தான் நாக்பூருக்குப் போயிருந்தவர், கணவரைக் கையும் களவுமாக பிடிப்பதற்காக இரவோடு இரவாக விமானத்தைப் பிடித்து மும்பைக்கு வந்து நேராக விடுதிக்குப் போய் கணவரையும், கள்ளக் காதலியையும் துவைத்து எடுத்து விட்டார்.
அடி வாங்கிய அமைச்சர் இப்போதுதான் முதல் முறையாக அமைச்சரானவராம்.
கள்ளக் காதல்: ஏட்டுக்கு மிளகாய்ப் பொடி வீச்சு!
அதே போல சென்னையில் கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவரின் செயலால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, வீட்டில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து கணவரின் கண்ணில் தூவி விட்டார். இதில் அவரது மகளும் துணையாக இருந்து அப்பாவின் கண்களில் மிளகாய்ப் பொடியை பூசி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு 51 வயதாகிறது. இவரது மனைவி வனஜா. 1981ம் ஆண்டு கல்யாணம் ஆனது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கல்யாணமாகி விட்டது. 2வது மகள் சரன்யா. கல்லூரியில் படித்து வருகிறார்.
ஆவடி காவல் நிலையத்தில்தான் வேலை பார்த்து வந்தார் ரவி. ஆனால் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் வரவே, அரக்கோணத்திற்கு இடமாற்றம் செய்து விட்டனர். இருப்பினும் குடும்பத்தை அரக்கோணத்திற்கு மாற்றாமல் ஆவடியிலேயே வைத்திருந்தார் ரவி.
கல்யாணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஒரு மகளுக்குக் கல்யாணமாகி, இன்னொரு மகள் கல்யாண வயதில் இருந்தும் கூட கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் ரவி. அந்தக் கள்ளக் காதலியும் போலீஸ்காரப் பெண்மணிதான்.
நீண்ட காலமாகவே இந்த கள்ளக்காதல் நீடித்துள்ளது. சமீபத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு வீடும் வாங்கிக் கொடுத்துள்ளார் ரவி.
இத்தனை காலமாக கணவரின் அக்கிரமங்களைப் பொறுத்துக் கொண்ட அவரது மனைவி வனஜா, இப்போது கள்ளக் காதலிக்கு வீடும் வாங்கிக் கொடுத்ததால் பொங்கி எழுந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் ரவி. மனைவியுடன் சண்டை பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த வனஜா, வீட்டை விட்டு வெளியேறுமாறு ரவியை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி, வீட்டில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து மனைவியை குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதைப் பார்த்த மகள் சரன்யா, வீட்டில் இருந்த செல்போன் கேமராவில் இதைப் பதிவு செய்து கொண்டார்.
இந்த சமயத்தில், கணவரின் அட்டகாசம் எல்லை மீறிப் போவதை உணர்ந்து கொதிப்படைந்த வனஜா, வீட்டில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து ரவியின் முகத்தில் வீசினார். அதைப் பார்த்து ஓடி வந்த சரன்யா, தன் பங்குக்கு மிளகாய்ப் பொடியை எடுத்து ஆத்திரத்துடன் தந்தையின் கண்களில் வீசினார்.
அலறித் துடித்த ரவியின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக ரவியை எழும்பூர் கண் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அங்கு ரவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரவி அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக பலமுறை ஆவடி காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார் அவரது மனைவி வனஜா. இதையடுத்து போலீஸாரும் ரவியை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைப்பர். அப்படியும் அவர் திருந்தவில்லை. இந்த நிலையில்தான் வனஜாவும், சரன்யாவும் சேர்ந்து ரவிக்கு மிளகாய்ப் பொடி தண்டனையைக் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications