தமிழர்களின் உரிமையை காப்பது முக்கியம்-ராகுல்
கொல்கத்தா: இலங்கையில் தமிழர்களின் உரிமையைக் காக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது.
இலங்கைப் பிரச்சினை சிம்பிளானது. அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
அதை நாங்கள் குறைக்க முயற்சிப்போம். இதுகுறித்து இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது இந்தியா.
இலங்கை தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை.
பிரதமர் பதவிக்கு அனுபவம் தேவை..
எனக்கு பிரதமர் பதவியை வகிக்கும் அளவுக்கு இன்னும் அனுபவம் இல்லை. எனவே இப்போதைக்கு அந்தப் பதவியை நான் ஏற்க மாட்டேன்.
நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். நாட்டின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.
மன்மோகன் சிங்கே தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும். அது நடக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பலமாக இறுக்க வேண்டும்.
தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைக்க இடது சாரி கட்சிகளுக்கு காங்கிரசின் கதவு திறந்து இருக்குமா? அல்லது மூடப்பட்டிருக்குமா? என்பதை யாராலும் தெரிவிக்க இயலாது. அதை கட்சி தலைவரும், பிரதமரும் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் விதிப்படி, எங்களுடன் யார் சேர விரும்பினாலும் கட்சியின் கதவு திறந்தே இருக்கும்.
போபர்ஸ் பீரங்கி ஊழல் என்று 20 வருடங்களாக எதிர் கட்சியினர் பொய் பிரசாரம் செய்தனர். ஆனால் உண்மையில், அதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை.
மத்திய அரசின் தேசிய கிராம வேலை உறுதியளிப்பு திட்டத்தை மேற்கு வங்க ஆளும் இடது முன்னணி அரசு சரிவர நிறை வேற்றவில்லை.
இந்த திட்டத்தில் உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள்தான் மிக மோசமான நிலையில் உள்ளன. இத்திட்டத்தை மேற்கு வங்காளமும் நிறைவேற்றாதது அதிர்ச்சி அளிக்கிறது.
அரசியல் லாபத்துக்காக பாபர் மசூதி இடிப்பு..
அரசில் லாபத்துக்காகவே பா.ஜகவினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த பிரச்சினையால் நமது நாட்டின் அரசியல் அமைப்பு உடைந்தது. இந்தியர்களை எதிர்த்து இந்தியர்களே மோதும் சூழல் உருவாக்கப்பட்டது.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அடித்தள மக்களின் தலைவராக திகழ்கிறார். எனவே அவரது கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது எங்கள் அணிக்கு சாதகமாக உள்ளது என்றார் ராகுல்.












Click it and Unblock the Notifications