இன்னோவாவில் வலம் வரும் தேர்தல் பார்வையாளர்கள்
நெல்லை: நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் தொகுதிகளுக்கு வந்து விட்டனர். இன்னோவா கார்களில் தொகுதிகளை வலம் வந்து கொண்டுள்ளனர்.
நெல்லை, தென்காசி தொகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், தேர்தல் செலவு கணக்குகள், தேர்தல் விதிமுறை மீறல்களை பார்வையிடவும் 6 மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
நாங்குநேரி, ராதாபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக ஏ.கே திரிபாதி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு சரத் எல் அகிர், கடையநல்லூர், தென்காசி தொகுதிகளுக்கு கெரூரி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளுக்கு மோகன், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துர் தொகுதிகளுக்கு ஜட்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நெல்லை, பாளை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட நிலயா மிட்டாஸ் மாற்றப்பட்டு புதிய பார்வையாளராக அனுராக் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்தல் பார்வையாளர்கள் 6 பேரும் நேற்று தங்கள் பணியை துவங்கினர். தேர்தல் பார்வையாளர்களை கலெக்டர் பழனியாண்டி மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் நேற்று காலை வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
பின்னர் தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர் கெரூரி கலெக்டர் அலுவலகம் வந்து தென்காசி தொகுதியில் வேட்பு மனு தாக்கலை ஆய்வு செய்தார். நெல்லை தொகுதியின் பார்வையாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நெல்லை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலை ஆய்வு செய்தார்.
தேர்தல் பார்வையாளர்கள் 6 பேரும் தொகுதிகளை சுற்றிவர இன்னோவா கார் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல் பார்வையாளர்களுக்கும் தேர்தல் விதிமுறை மீறல்கலை படம் பிடிக்க தலா ஒரு போட்டோகிராபர், வீடியோ கிராபரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.