போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை - இலங்கை
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பலித கொகனா சிஎன்என் ஐபிஎன் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், போர் களத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் இலங்கை அரசால் முடியும். இதில் 3வது நாட்டின் தலையீட்டை நாங்கள் ஏற்க மாட்டோம்.
போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அது முடிவுக்கு வந்து விடும். அதற்கான குறிப்பிட்ட கால இலக்கை தெரிவிக்க முடியாது. ஆனால் அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்படும் வரை எங்களது லட்சியத்திலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம்.
விடுதலைப் புலிகள்தான் நெருக்கடியை உருவாக்கினர். எனவே இலங்கை பாதுகாப்புப் படையினர் தற்போது செய்து வரும் நடவடிக்கைகளை யாரும் குறை கூறக் கூடாது.
ராணுவம் புலிகளின் அரண்களைத் தகர்த்து 1 லட்சத்து 7 ஆயிரம் பேரை மீட்டுள்ளது. தற்போது தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அவர்களையும் ராணுவம் விரைவில் மீட்டு விடும் என்றார் அவர்.