மதுரை மருத்துவமனை முன் பிரசாரம் செய்ய தடை
மதுரை: மதுரையில் அரசு மருத்துவமனைக்கு முன்பாக அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய போலீஸ் சூப்பிரன்டு தடை விதித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றம் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 13ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் தென்மண்டல திமுக செயலாளர் அழகிரி களமிறங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன் போட்டியிடுகிறார். இதையடுத்து மதுரை முழுவதும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின் போது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிடுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினையிலிருந்து கோரிப்பாளையமும் தப்பவில்லை.
மதுரையின் முக்கிய பகுதி என்பதால் அனைத்து கட்சியினரும் இங்கு அடிக்கடி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுரை அரசு மருத்துவமனை இருப்பதாலும், கலெக்டர் அலுவலகம், அண்ணா பஸ் நிலையம் போன்றவற்றுக்கு அதன் வழியாக தான் செல்ல வேண்டும் என்பதால் கோரிப்பாளையத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதிகம் அவதியுற்று வருகின்றனர். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து மருத்துவமனை பகுதியில் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரன்டு பாலகிருஷ்ணனுக்கு புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகாரை கவனமாக படித்த அவர், பிரசாரம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு புறநகர் பகுதியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை மட்டும் பயன்படுத்த வேண்டும். மருத்துவமனை பகுதிகளில் பிரசாரம் செய்ய கூடாது என்றார் மதுரை போலீஸ் சூப்பிரன்டு பாலகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications