கரூர்: திமுகவுக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு
கரூர்: கரூர் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமிக்கு கரூர் ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதை கரூர் மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜாவிடம் கேட்டபோது, இந்த தேர்தலில் ரசிகர்கள் யாருக்கு பிரியமோ அவர்களுக்கு இஷ்டம் போல் வாக்களிக்கலாம் என்று தலைவர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தையோ, மன்ற கொடியையோ நாங்களும் சரி, மற்ற மன்றத்தினரும் சரி எந்த சூழ்நிலயிலும் யாருக்கு ஆதரவாகவும் பயன்படுத்த மாட்டோம்.
எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் மன்றம் நடத்தும் விழாக்களிலும், நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் கே.சி. பழனிசாமி கலந்து கொண்டு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றார்.
அதனால் எங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்று கூடி பேசியபோது கரூர் எம்பியும், திமுக வேட்பாளருமான கே.சி.பழனிசாமிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம்.
கடந்த பல வருடங்களாக எதையும் எதிர்பாராமல் தேவையறிந்து உதவி செய்த கே.சி.பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் நாங்களும் சரி, எங்கள் தலைவரும் சரி, என்றும் நன்றியை மறக்க மாட்டோம் என்றார்.
கரூர் பாராளுமன்றத் தொகுதி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்றது. இதனால் இந்த 4 மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றங்களும் திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications