பெங்களூர் வேண்டாம்; பஃபல்லோ போதும்!-இது ஒபாமா

அமெரிக்க வேலைகளை வெளிநாட்டில் கொடுத்துச் செய்வதற்கு பதில், அதை அமெரிக்காவிலேயே செய்து, வேலை வாய்ப்புகளை அதிகரிப்போம் என ஒபாமா கூறியிருந்தார்.
இப்போது அதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். இது இந்தியாவுக்கு பாதகமானது என்றாலும், அமெரிக்கப் பார்வையில் அவர்களுக்கு பெரும் நன்மை தரக்கூடியதாக உள்ளது என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனங்கள் பெங்களூர், சென்னை, புனே, ஹைதரபாத் போன்ற இந்திய நகரங்களில் அவுட்சோர்ஸிங் மூலம் தங்கள் நிறுவனங்களுக்கான பணிகளைச் செய்து கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும் கொடுத்து வந்தது அமெரிக்கா.
இந் நிலையில் வெளிநாடுகளில் அவுட்சோர்ஸிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடையாது என திட்டவட்டமாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
'இனி பெங்களூருக்கு நோ சொல்லுங்க, பஃபல்லோ சிட்டிக்கு யெஸ் சொல்லுங்க' எனும் புதிய முழக்கம் அமெரிக்காவில் ஒலிக்கத் துவங்கியுள்ளது. அதுவே ஒபாமா அரசின் கொள்கையாகவும் உள்ளதால், அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக செயல்படுத்த துவங்கியுள்ளன.
அதன்படி முழுக்க முழுக்க அமெரிக்காவில் இயங்கும், அனைத்து வேலைகளையும் அமெரிக்காவிலேயே செய்து கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச் சலுகை கிடைக்குமாம். இதை ஒபாமா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவர் கூறியுள்ளதாவது:
"வெளிநாட்டில் பணிகளைச் செய்து கொண்டு , பெரும் லாபம் சம்பாதித்து, அமெரிக்காவில் வரிச் சலுகையை அனுபவிக்கும் நிறுவனங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் இன்றுடன் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த நிறுவனங்களுக்கு வேண்டிய அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த வரிச்சலுகைகள் மக்களின் பணம்தான். அதை வீணடிக்க மாட்டோம்.
இதற்குமுன், அமெரிக்காவின் பஃபல்லோ சிட்டியைவிட, இந்தியாவின் பெங்களூரில் ஒரு புதிய வேலையை உருவாக்கினால் செலவு குறைவு என்ற முட்டாள்தனமான வரித் திட்டம் இருந்தது. இப்போது அதை அடியோடு மாற்றியுள்ளோம்... " என்று கூறியுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களில் வேலை இழக்கும் நபர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ள நிலையில், ஒபாமாவின் இந்தத் திட்டம் உடனடிப் பலன் தரும் என நம்புகின்றனர் அமெரிக்கர்கள்.












Click it and Unblock the Notifications